ஞாயிறு, 29 அக்டோபர், 2017

ஓயுமா ஹைவேஸ் கொள்ளை?: விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை....

ஓயுமா ஹைவேஸ் கொள்ளை?மின்னம்பலம் :விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைத்துறை மாவட்டத் திட்ட இயக்குநரான பீமா சிம்ஹா என்பவரை சி.பி.ஐ-யின் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தது, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வியாபாரிகளிடையே நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நெடுஞ்சாலையின் இரு ஓரங்களிலும் இரும்புக் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருக்கும். சாலையோரம் அமைந்திருக்கும் ஹோட்டல்களோ, ரிசார்ட்டுகளோ, பெட்ரோல் பங்குகளோ தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மாவட்டத் திட்ட அலுவலரிடம் அனுமதி வாங்கி, தங்கள் நிறுவனங்களுக்கு பாதை ஏற்படுத்திக் கொள்ளலாம். இல்லையேல் ஏற்கெனவே இருக்கிற பாதை வழியாகத்தான் சுற்றிக்கொண்டு வர வேண்டும்.
இந்த வகையில் விழுப்புரத்தை ஒட்டியுள்ள என்.ஹெச்.45 நெடுஞ்சாலையையொட்டி எம்.ராயர் என்பவருக்குச் சொந்தமான கட்டடம் உள்ளது. அதை ஹோட்டல் நடத்துவதற்காக இன்னொருவருக்கு ராயர் வாடகைக்கு விட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் அந்த இடத்தின் உரிமையாளர் ராயருக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுப்பிய நோட்டீஸில், ‘உங்களது இடத்தில் ஹோட்டல் அனுமதி பெறாமல் செயல்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராயர் ஆகஸ்ட் மாதம் அனுமதிக்கு விண்ணப்பித்து அதற்கு உரிய கட்டணத்தையும் நெடுஞ்சாலைத்துறையிடம் கட்டினார்.
ஆனால், தேசிய நெடுஞ்சாலைத்துறையில் இருந்து அக்டோபர் மாதம் வரையிலும் அனுமதி கிடைக்காததால், கடந்த புதன்கிழமை விழுப்புரம் மாவட்டத் தேசிய நெடுஞ்சாலைத்துறை மாவட்டத் திட்ட அலுவலர் பீமா சிம்ஹாவை நேரில் சென்று சந்தித்தார் ராயர். அப்போது, அனுமதி கொடுப்பதற்காக இரண்டு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது.
மறுநாள் வியாழக்கிழமை ராயர் இதுபற்றி சென்னையில் இருக்கும் சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுக்க, அந்தப் புகாரின் அடிப்படையில் அக்டோபர் 27ஆம் தேதி பீமா சிம்ஹாவைக் கைது செய்தனர் சி.பி.ஐ. போலீஸார்.
“இதில் தைரியமாக புகார் கொடுத்தது ராயர் மட்டும்தான். இன்னும் எத்தனையோ பேர் லஞ்சம் கொடுக்க முடியாமல், தொழில் நடத்த முடியாமல் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கைதின் மூலமாவது தேசிய நெடுஞ்சாலத்துறையில் லஞ்சம் வாங்கும் மற்ற அதிகாரிகள் திருந்த வேண்டும்” என்று கோரிக்கை வைக்கின்றனர் தேசிய நெடுஞ்சாலையோரம் வர்த்தக நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக