ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

ராஜஸ்தான் சாமியார் பாலியல் புகாரில் கைது!

ராஜஸ்தான் சாமியார் பாலியல் புகாரில் கைது!மின்னம்பலம் : சட்டம் படித்த இளம் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த ராஜஸ்தான் சாமியாரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் ஆசிரமம் நடத்தி வருபவர் 70 வயதான கவுசலேந்திர மஹராஜ் என்ற ஃபலஹரி சாமியார். ஆசிரமத்தில் வைத்து இவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பிலாஸ்பூரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் போலீஸில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி இரவு சாமியார் மஹராஜ் தன்னைத் தனியாக அழைத்து ஆசிரமத்தில் வைத்துக் கற்பழித்ததாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து சாமியார் மீது கடந்த 20ஆம் தேதி வழக்குப்பதிவு செய்த போலீஸார் மூன்று நாள்களாக அவரை முறையாக விசாரித்தனர். அதன் முடிவில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.
சட்டப்படிப்பு முடித்த இளம்பெண் ஆசிரமத்துக்கு நிதி வழங்குவதற்காகக் கடந்த மாதம் 7ஆம் தேதி சென்றுள்ளார். அன்று கிரகணம் என்பதால் சாமியார் யாரையும் சந்திக்க மாட்டார் என்று கூறி இளம்பெண் ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டார். அன்று இரவு சாமியார் அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பழங்களை மட்டும் சாப்பிடுவதால் இந்தச் சாமியாருக்கு ஃபலாஹரி என்ற அடைமொழி உள்ளது. கடந்த மாதம் அரியானா சாமியார் குர்மீத் ராம் கற்பழிப்பு குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக