ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

Bangla மேற்கு வங்கம்: பங்களா எனப் பெயர் மாற்றம்!

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பங்களா’ எனப் பெயர் மாற்றம் செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி, மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாற்றம் செய்வது தொடர்பான தீர்மானம் மாநிலச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, ஆங்கிலத்தில் ‘பெங்கால்’, பெங்காலியில் ‘பங்களா’ மற்றும் இந்தியில் ‘பங்கால்’ என மூன்று பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
ஆனால், காங்கிரஸ், பாஜக, இடதுசாரி முன்னணி ஆகியவை அரசின் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. இது தொடர்பான விவாதத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இடதுசாரி கட்சிகள் தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். பாரதிய ஜனதா கட்சி தீர்மானத்தை எதிர்த்தது. எனினும், குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேறியது.
அதற்கு மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. ஒரே மாநிலத்துக்கு மூன்று பெயர்கள் வைத்தால் பல குழப்பங்கள் ஏற்படும் என இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கப்பட்ட்து.
இந்த நிலையில், மீண்டும் பெயர் மாற்றத்துக்கான திருத்தம் செய்யப்பட்ட தீர்மானம் நேற்று முன்தினம் (செப்டம்பர் 8) மாநிலச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதில் அனைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த தீர்மானத்தின்படி இனி ‘மேற்கு வங்காளம் அனைத்து மொழிகளிலும் பங்களா என்னும் பெயரால் அழைக்கப்படும்’. தற்போது இந்த சட்டவரைவு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆங்கில எழுத்துகளின் வரிசைப்படி, மேற்கு வங்கம் தற்போது கடைசி இடத்தில் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு மேற்கு வங்கச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஆங்கிலம், வங்க மொழி ஆகிய இரு மொழிகளிலும் ‘பசின் பங்கா’ என்று வழங்க வலியுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. minnambalam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக