செவ்வாய், 5 செப்டம்பர், 2017

'ப்ளூ வேல்' கேள்விகளால் அதிர்ச்சி : 104 சேவை மைய அதிகாரிகள் திணறல்

விபரீத விளைவுகளை ஏற்படுத்தும், 'ப்ளூவேல் கேம்' குறித்த ஆலோசனை வழங்கும், 104 இலவச சேவை மையத்துக்கு, தினமும் ஏராளமான கேள்விகளுடன் போன் அழைப்புகள் வருகின்றன. 'நான் ஏன் ப்ளூவேல் விளையாடக்கூடாது' என்பது போன்ற கேள்விகள், அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைக்கிறது ஆலோசனை : உயிரை குடிக்கும், 'ப்ளூவேல் வீடியோ கேம்' தொடர்பாக, மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக சுகாதாரத் துறை, '104' என்ற இலவச போன் எண் மூலம் பயன்பெறும் வகையில், ஆலோசனை வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளது. 'ப்ளூவேல்' தொடர்பான சேவை துவங்கியதும், தினமும் ஏராளமான கேள்விகள், சேவை மையத்துக்கு வருகின்றன. குறிப்பாக, 'இந்த விளையாட்டை ஏன் விளையாடக்கூடாது; இதனால் என்ன பாதிப்பு வந்து விடப் போகிறது' என்ற ரீதியில், பலரும் கேள்விகளை துளைத்தெடுக்க, மனநல ஆலோசனை வழங்கும் அதிகாரிகள், திணறிப் போயுள்ளனர்.


ஆர்வம் மிகுதி :
இது குறித்து, 104 சேவை மையத்தின் நிர்வாக மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது: எதிர்முனையில் பேசுபவரின் மனநிலையை கண்டறிய, அழைப்புகளை, மூன்று விதமாக பிரிந்து வைக்கிறோம். ஏற்கனவே, ப்ளூவேல் விளையாடி, மீண்டு, வெளியே வர நினைப்பவர்; 'ப்ளூவேல்' விளையாடுபவர், அல்லது அவரது கையில் உள்ள குறியீட்டை பார்த்து, ஆலோசனை மையத்துக்கு தகவல் தெரிவிப்பவர். இதுமட்டுமின்றி, 'நான் ஏன் ப்ளூவேல் விளையாடக்கூடாது' என,ஆர்வ மிகுதியில் கேள்வி கேட்பவர் என, வகைப்படுத்தி வைக்கிறோம்.இதில், 70 சதவீத அழைப்புகள், 'ப்ளூவேல் விளையாடினால் என்ன தவறு' என்ற ரீதியில் கேட்கப்படுகின்றன. இவ்வாறு கேட்பவர்களிடம், 'ப்ளூவேல்' விளையாட்டால் ஏற்படும் விபரீதங்களை விளக்கி, அந்த விளையாட்டு மீதான அவர்களின் ஆர்வத்தை திசை திருப்பி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர்  தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக