ஞாயிறு, 11 ஜூன், 2017

எய்ம்ஸ் : தஞ்சையோடு மல்லுக்கட்டும் மதுரை!

எய்ம்ஸ் : தஞ்சையோடு மல்லுக்கட்டும் மதுரை!
minnambalam.: மத்திய அரசின் பல் நோக்கு சிறப்பு மருத்துவமனையான எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்பது நம் மாநிலத்தின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு இரண்டாயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியது.
இதையடுத்து மத்திய அரசின் ஆய்வுக் குழு தமிழகத்தில் ஆய்வு செய்து... ‘’தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, தஞ்சாவூர் அருகே உள்ள செங்கிப்பட்டி, காஞ்சி மாவட்டம் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, மதுரை மாவட்டம் தோப்பூர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆகிய இடங்களில் ஒன்றில் அமைக்கலாம்’' என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. மேலும் இதில் செங்கிப்பட்டிகே அந்த குழு முன்னுரிமை கொடுத்ததாக சொல்கிறார்கள்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் அமைக்கலாம் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து விட்டது.
இந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவுக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அந்த விழாவில்... எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், ‘’அம்மா எந்த இடத்தில் எய்ம்ஸ் அமைய வேண்டும் என்று விரும்பினாரோ அந்த இடத்தில் அமையும்’’ என்றார்.

இதையடுத்து தஞ்சையில்தான் எய்ம்ஸ் அமையும் என்பது உறுதியான நிலையில்... மதுரையில் எய்ம்ஸ் அமைய வில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்யவும் தயார் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஒருபடி மேலே போன திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ. போஸ், ‘எய்ம்ஸ் மதுரைக்கு வரவில்லை என்றால் மதுரை மாவட்டத்திலுள்ள எட்டு அதிமுக எம்.எல்.ஏ.க்கள், பிற கட்சிகளை சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் என பத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவோம்’ என்று அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில்... தஞ்சை செங்கிப்பட்டி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான போராட்டக் குழுவினர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் நம்மிடம்,
‘’மத்திய குழு ஆய்வு செய்த ஐந்து இடங்களில் தஞ்சை செங்கிப்பட்டியில்தான் சட்ட சிக்கல் இல்லாத 206 ஏக்கர் நிலம், மின்சார வசதி, 24 மணி நேர தண்ணீர் வசதி, தூய காற்று, விமான, ரயில், பேருந்து வசதிகள், தேசிய மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் சாலைகள் என்று எய்ம்ஸ் அமைவதற்குத் தேவையான வசதிகள் அனைத்தும் இயற்கையாகவே உள்ளன. மேலும் இது தமிழகத்துக்கு மையமாகவும் இருக்கிறது.
இந்நிலையில் வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று இப்போது கோரிக்கை வைப்பது என்பது... தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை தவிர்க்கவோ தள்ளிப் போடவோதான் பயன்படுமே தவிர வேறு எதற்கும் பயன்படாது. தவிர, மத்திய குழு ஆய்வு செய்யும்போதோ, முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்தபோதோ மதுரையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என்று சொல்லவில்லை. இப்போது சொல்கிறார்கள் என்றால் அதில் உள்நோக்கம் உள்ளது. எனவே தேவையான அனைத்து அம்சங்களும் பெற்றுள்ள செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் அமைக்கப்படுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட வேண்டும்’’ என்று வலியுறுத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக