ஞாயிறு, 11 ஜூன், 2017

கோவையில் ரேக்ளா பந்தயம்!

தொடங்கியது கோவையில் ரேக்ளா பந்தயம்!தமிழர்களாகப் பிறந்த ஒவ்வொருவருடைய மனதிலும், பாரம்பர்யத்துக்கு முக்கிய இடமுண்டு. ஒவ்வொரு விழாக்களையும் தங்களின் உறவுநிலைகளை மேம்படுத்துவதற்காக, மறைமுகமாக உருவாக்கினார்கள், பண்டையத்தமிழர்கள்.
அந்த விழாக்களில் வீரம், விருந்தோம்பல், துணிவு, இக்கட்டான சூழலில் முடிவெடுக்கும் நிர்வாகத்திறமை ஆகிய கலைகளையும் மறைமுகமாக உட்புகுத்தி வளர்த்து வந்தனர். அப்படி அனைத்து விதமான திறன்களும் மேம்படும் வகையில் ஊர்த் விழாக்களில் நடத்தப்படும் ஒரு வகை பாரம்பர்ய விளையாட்டுதான், ரேக்ளா பந்தயம்.

அது காலப்போக்கில் ஊர்த் திருவிழாக்களில் இருந்து விலகி, தனித் திருவிழாவாக உருப்பெற்றது. அப்படி கொங்கு மண்டலத்தில் கொண்டாடப்படும், பிரபலமான பாரம்பர்ய விழாதான், ‘கோவை ரேக்ளா பந்தயம்’. அது இன்று (ஜூன் 11) தமிழ்நாடு ரேக்ளா குழுவின் சார்பாக, கோவை கொடிசியாவில் உள்ள பரந்துபட்ட நிலப்பரப்பில் நிகழ்ந்து வருகிறது. இப்பந்தயத்தில் 200 மீ மற்றும் 300 மீ பிரிவுகளில் ரேக்ளா பந்தயம் நடைபெறுகிறது.
இந்த ரேக்ளா பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, கம்பம், மதுரை, திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், புதுக்கோட்டை ஆகியப்பகுதிகளில் இருந்து பந்தயக்காளைகள் வரவழைக்கப்பட்டு பந்தயம் எந்தவொரு பிரச்னையுமின்றி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பாரம்பர்ய விளையாட்டுக்கான தடை நீங்கியதும், இந்தாண்டு கோவையில் நிகழும் முதல் பெரிய ‘ரேக்ளா பந்தயம்’ இதுவாகும். இதற்காக, பல்வேறு பகுதிகளில் இருந்தும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பாரம்பர்யத்தின் ஆணிவேராக இருக்கும் ரேக்ளா பந்தயத்தை, அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தும், கோயம்புத்தூர்க்காரர்களின் முயற்சி வரவேற்கத்தக்கது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக