செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

மனு தர்மத்தை ஒழிக்காமல் சங்கரராமன்களுக்கும், கோகிலாம்மாக்களுக்கும் நீதி கிடைப்பதில்லை, சங்கராச்சாரிகளுக்கும் தண்டனை கிடைப்பதில்லை

பொன்னாருக்கு கட்டாந்தரையும் பொறுக்கி புகழ் சுப்ரமணிய சாமிக்கு சம பொன்னிருக்கையும் தரும் சங்கரமடத்தில் பார்ப்பனியத்தின் பேதம் மட்டுமல்ல, ஏழை பணக்காரன் பேதமும் உண்டு.
சென்னை ராஜிவ்காந்தி மருந்துவமனையில் புற நோயாளிகள் மற்றும் நோயாளி அல்லாத காத்திருப்போர் தங்குமிடத்தில் தற்செயலாக கோகிலாம்மாவைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது மோடியின் செல்லாத நோட்டு அறிவிக்கப்பட்டு ஒரு பத்து நாள் இருக்கும்சட்டுன்னு சாகக் கூட புண்ணியம் பண்ணாத சென்மம் நாங்க – கோகிலாம்மா. இடம்: சென்னை அரசு மருத்துவமனை.
 “சட்டுன்னு சாகக் கூட புண்ணியம் பண்ணாத சென்மம் நாங்க. அறிமுகம் இல்லாத மனுசாள் கூட என்னப் பாத்து பாவம் பண்ணின ஜென்மமுன்னு சொல்லும் போது பூமிக்கு பாரமாத்தான் நான் பொறந்தேன்னு நெனைக்காம இருக்க முடிலையே!. யாரைச் சொல்லியும் குத்தமில்ல. சக மனுசாகிட்ட எப்புடி நடந்துக்கனுமின்னு பணம்தான் சொல்றது. ராமா! ராமா! இதுக்கு மேலேயும் லோகத்துல நேக்கு இருக்க முடியலப்பா….” என்று திடிரெனக் கதறி அழுதார் கோகிலாம்மா.
ஐம்பது வயதைக் கடந்திருக்கும் அவர் 20 நாளுக்கு மேலாகக் கணவருடன் மருத்துவமனை வளாகத்தில் தான் தங்கியிருந்தார். மிகவும் பரிதாப நிலையில் தரையில் சுருண்டு அவர் கணவர் படுத்திருந்தார். வயிறு வலி, கிட்னியில் பிரச்சனை என்று இங்கு சேர்ந்த அவர்களைப் பாண்டிச்சேரி புற்றுநோய் மருத்துவமனையில் டெஸ்ட் எடுத்து வரச்சொல்லி மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது. வீடே இல்லாத அவர்கள் புதுவைக்குப் போக பஸ்சுக்குப் பணமில்லாது அங்கேயே தங்கியிருந்தனர்.
கோகிலாவின் கணவர் பாலசுப்பிரமணியன், புரோகிதத்தையே தொழிலாகக் கொண்டவர் . இவர்களுக்குப் பிறந்த குழந்தை மனவள பாதிப்போடு வளர்ந்து இன்றைக்கு அவனுக்கு பதினைந்து வயது இருக்கும் என்றார் கோகிலா.
மகன் பிறந்ததும் சிறிது காலத்திலேயே புரோகிதத் தொழில் பிடிக்காமல் விசேசத்துக்குச் சமையல் செய்ய ஆரம்பித்துள்ளார். காலப்போக்கில் மனவளர்ச்சி பாதித்த மகனுக்கு மருத்துவம் செய்துகொண்டு சென்னையில் வாழ்வதற்கான வருமானம் கிடைக்காததால் சொந்த ஊர் சாதிசனத்தின் மேல் நம்பிக்கை வைத்து காஞ்சிபுரத்துக்குத் திரும்பியுள்ளார். ஐயர் என்ற தகுதியில் சங்கரமடத்தில் சமையல் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
“காஞ்சியில ஒரு சின்ன வாடகை வீட்டுல குடியிருந்துட்டு சங்கரமடத்துல 12 வருசமா சமையல் வேலை செஞ்சுட்டு இருந்தோம். சாப்பாடு மடத்துல முடிஞ்சுரும். வாங்கற சம்பளம் வாடகை, மருந்துக்கும் தான் சரியாருக்கும். ஆசப்பட்டு  ஒன்னு கூட வாங்கிச் சாப்பிட முடியாது.

எந்த நேரமும் அவர் அனல்லேயே நிப்பார். பாத்தரம் தேய்க்கறது, காய் கழுவறது, சுத்தம் செய்றதுன்னு தண்ணியிலேயே எம்பொழப்பு போகும். கால் கையெல்லாம் நரம்பு இழுத்துகிட்டு புண்ணாயிருச்சு. அவருக்கும் கிட்னியில கட்டி வந்தது. நாலு பேரு நல்லவங்க வர்ர எடம் உங்களப் பாத்து முகம் சுழிக்கக் கூடாது வேற வேலை பாத்துக்குங்கன்னு சங்கர மடத்துல சொல்லிட்டாங்க. பத்து வருசத்துக்கு மேல மடத்துல வேலபாத்தோம். திடீர்னு ஒரு நாள் எந்த உதவியும் செய்யாம வரவேணாம்னு சொன்னதும் மேற்கொண்டு என்ன செய்யறதுன்னே ஒண்ணும் தோணல”.

மவராசன் குந்தியிருக்கற நாற்காலிக்கி நோகாம “நன்னா பேஷா பாத்துப்பா போ”ன்னு கல்கண்ட எடுத்து கையில குடுக்கறாரு.
மடத்தில் உள்ள சில மேல் மட்ட நிர்வாகிகளிடம் உதவி கிடைக்கவில்லை என்றதும் மடாதிபதி ஜெயேந்திர  சங்கராச்சாரியிடமே கோகிலா தம்பதியினர் தன் குறையைக் கொட்டியுள்ளார்கள்.
“அய்யா நாங்க 10 வருசத்துக்கு மேல மடத்துலதான் வேலை செய்றோம். உங்கள விட்டா எங்களுக்கு வேற போக்கிடம் கெடையாது. முடியாத பிள்ளைய வச்சுருக்கோம். நீங்க பாத்து உதவி செஞ்சாதான் உண்டுன்னு ஒரு தடவ இல்ல நாலு தடவ சங்கராச்சாரி கால்ல விழுந்துருக்கேன். மவராசன் குந்தியிருக்கற நாற்காலிக்கி நோகாம “நன்னா பேஷா பாத்துப்பா போ”ன்னு கல்கண்ட எடுத்து கையில குடுக்கறாரு.
புளிச்ச ஏப்பக்காரனுக்கு பசியேப்பம் புரியாதுங்க. அதனாலதான் ‘அழுவாதப் பாப்பா இந்தா வாழப்பழம்னு’ கல்கண்டத் தூக்கி கையில கொடுக்குறாரு சங்கராச்சாரி. சாதி பாசமெல்லாம் ஒடம்புல தெம்பு இருக்கற வரைதான். முடியாதவங்கள யாரு வேலைக்கி வச்சுக்குவா? நல்லவா கெட்டவா யாருன்னு தெரியாம உலகம் புரியாம இருந்துட்டோம். எங்க ஆளுங்களுக்கு நீங்க எவ்வளவோ தேவலாம்”.
ஆயிரம் பேருக்கு அன்னதானமா இருந்தாலும் அற்புதமா சமைப்பாராம் கோகிலாவின் கணவர். அவர் சமைச்சதை வயிராற சாப்பிட்டு வாயார வாழ்த்தினவங்க எத்தனெப் பேர் இருப்பாங்க, ஒருத்தர் புண்ணியம் கூட அவங்களக் காப்பாத்தாம நடுத்தெருவுல விட்ட போது பார்ப்பனராவே இருந்தாலும் கடவுள் மேல கோபம் வரத்தேனே செய்யும்?

“வாடகை கொடுக்க முடியாம வீட்ட காலி செஞ்சுட்டு கோயில்ல அன்னதானம், தெரிஞ்ச வீட்டு திண்ணையிலப் படுக்கையின்னு ஆறு வருசமா இப்படிதான் வாழ்க்கைய ஓட்டறோம். இந்த நெலமையில எம்பிள்ளைய எங்கூட எப்புடி வச்சுக்க முடியும். அவர் தங்கச்சிதான் பாத்துக்குது. அவங்களும் வசதியானவங்க கிடையாது. ஏதோ எங்க கையில கெடைக்கிற காச எப்பையாவது கொடுப்போம்.
மடத்துக்கு வந்துபோன மாமா ஒருத்தர் நாலு வருசமா மாசம் 500 ரூபா உதவி செஞ்சாரு. அவருக்கும் பெரிய சம்பாத்தியம் இல்ல, பிள்ளைகள வச்சுட்டு சிரமப்படுறவருதான் இருந்தாலும் எங்க மேல எறக்கப்பட்டு குடுத்துட்டு இருந்தாரு.  பிறகு அவரும் பொண்ணு கல்யாணத்துக்கு வாங்கின கடனுக்கு வட்டி கட்டவே சம்பாத்தியம் போதல மண்ணிச்சுருங்கோ, மாமின்னு கைய விரிச்சுட்டார்.”

இதுதான் கோகிலாம்மாவின் கதை. அரசு மருத்துவமனையில் இருக்கும் இல்லாமை எனும் வறுமையை கொண்டிருக்கும் மக்கள் கோகிலாம்மாவுக்கு முடிந்த அளவு உதவுகிறார்கள். அம்பானி, டாடா, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஆர்.எஸ்.எஸ், பாஜக பிரமுகர்கள் வந்து போகும் பணம் பிதுங்கும் சங்கர மடம் உதவ முடியாதென்று கைவிரித்து விட்டது. பொன்னாருக்கு கட்டாந்தரையும் பொறுக்கி புகழ் சுப்ரமணிய சாமிக்கு சம பொன்னிருக்கையும் தரும் சங்கரமடத்தில் பார்ப்பனியத்தின் பேதம் மட்டுமல்ல, ஏழை பணக்காரன் பேதமும் உண்டு என்பதை கோகிலாம்மாவும் அந்த தொண்டுக் கிழ சாமியாரும் உணர்த்துகிறார்கள்.
காஞ்சிப் பெரியவரின் அருளுரையின் படி பார்த்தால் காஞ்சிமடத்தில் இருந்த பெரியவர், வேதம் விதித்த தர்ம வழியைப் பின்பற்றிப் புண்ணியத்தை அடைந்தவர். கோகிலா தம்பதியோ ஆசை வயப்பட்டு பிறருக்குத் தீங்கு செய்து பாவத்துக்கு ஆளானவர் என்பதுதான்.
மனு தர்மத்தை ஒழிக்காமல் சங்கரராமன்களுக்கும், கோகிலாம்மாக்களுக்கும் நீதி கிடைப்பதில்லை, சங்கராச்சாரிகளுக்கும் தண்டனை கிடைப்பதில்லை!
– சரசம்மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக