புதன், 8 பிப்ரவரி, 2017

அதிகாரிகள் அடுத்தடுத்து ராஜினாமா.. உறவினர்கள் தலையீடு பயம் ?

ஜெ.,வால் நியமிக்கப்பட்ட, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஒவ்வொருவராக ராஜினாமா செய்து வருவது, அரசு வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெ., முதல்வராக இருந்த போது, தலைமைச் செயலராக பணியாற்றி, ஓய்வு பெற்ற ஷீலா பாலகிருஷ்ணன், அரசு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வெங்கடரமணன், முதல்வர் அலுவலக செயலராக பணியாற்றினார்.
மழை நீர் சேகரிப்பு திட்டத்தை, ஜெ.,க்கு எடுத்துரைத்து, அவருக்கு பெயர் கிடைக்க வழிவகுத்த, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர், முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
 ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஜெ.,வின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தனர். ஓய்வு பெற்றவர்களை பணி அமர்த்தியது, கடும் விமர்சனத்திற்கு உள்ளான போதும், அவர்களின் பணியை, ஜெ., பயன்படுத்த தவறவில்லை.அவர் மறைவுக்கு பின், முதல்வராக பன்னீர்செல்வம் இருந்த வரை, அவர்கள் தங்கள் பணியை தொடர்ந்தனர்.
தற்போது, சசிகலா, முதல்வராகப் போகும் நிலையில், ஜெ., ஆதரவு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். ஷீலா பாலகிருஷ்ணனை தொடர்ந்து, வெங்கடரமணன் விடுப்பில் சென்றார்.

தற்போது, சாந்தா ஷீலா நாயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேபோல், தமிழக அரசின் ஆலோசகராக, டில்லியல் பணியாற்றும் அதிகாரியும் ராஜினாமா செய்து விட்டதாக தெரிகிறது.
இவர்களின் திடீர் ராஜினாமா, அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவிடம் பணிபுரிய விருப்பம் இல்லாமல், பதவியை ராஜினாமா செய்தனரா அல்லது சசிகலா குடும்பத்தினரின் வற்புறுத்தலால், பதவி விலகினரா என, ஒட்டுமொத்த அரசு வட்டாரமும் குழப்பத்தில் உள்ளது.

இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சசிகலா முதல்வரானால், அவரது உறவினர்கள் தலையீடு, ஒவ்வொரு துறையிலும் அதிகரிக்கும். அந்த பயம் காரணமாக, மூத்த அதிகாரிகள் விலகுகின்றனர். பணியில் இருப்போரும், மத்திய அரசு பணிக்கு செல்வது குறித்து ஆலோசித்து வருகின்றனர்' என்றார். - நமது நிருபர் - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக