திங்கள், 6 பிப்ரவரி, 2017

ஏதோ ஜெ பொற்கால ஆட்சி நடத்தியதைப் போலவும் சசி காட்டாட்சி நடத்துவார்

ஜெவுக்கு கிடைத்த பூப்பாதை சசிகலாவுக்கு கிடையாது? ஏன்?
ஜெயலலிதா சதாசர்வ காலமும் கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த காலம் அது. அமைச்சர்கள், அதிகாரிகள் என எல்லோரும் அங்கேபோய் தான் அவரை பார்க்க வேண்டும். போக்குவரத்து செலவு, கால விரயம், கோப்பு தேக்கம் என சீரழிவின் உச்சம் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆனால் தினமலர் எனும் பெரும்சொம்பு மட்டும், "ஆங்கிலேயர் காலத்தைப் போல வெயில்காலம் என்பதால் மலையில் இருந்தே அட்டகாசமாக நிர்வாகம் செய்கிறார் ஜெ," என ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்து எழுதியிருந்தது. நிற்க.
இது ஒரு உதாரணம் தான். இதுபோல் ஆயிரம் உதாரணங்கள் உண்டு. 2ஜி இழப்பு வழக்கை ஊழல் வழக்கு என்பார்கள். சொத்துக்குவிப்பு வழக்கை சொத்து வழக்கு என்பார்கள். இப்படி ஜெவின் எல்லா தவறுகளுக்கும், நிர்வாகச் சீர்கேடுகளுக்கும் வேறு மாதிரியான முகம் கொடுத்து தினமலர் போன்ற 'இனவெறி' ஊடகங்கள் அவரைத் தூக்கிப் பிடித்ததன் வெளிப்பாடுதான் அவர் இவ்வளவு தவறுகள் செய்தும், சீர்கேடுகள் செய்தும் மீண்டும் அவரால் ஆட்சிக்கு வரமுடிந்தது,மக்கள் மத்தியில் அவரது பெயர் பெருமளவில் கெடாமல் போய்ச் சேரவும் முடிந்தது.

இதற்காக ஜெ பெரிதாக மெனக்கெடவெல்லாம் இல்லை. அவரது பிறப்பு சார்ந்த தகுதியே போதுமானதாக இருந்தது. ஒரு திராவிடக் கட்சியின் தலைமையாக ஒரு பார்ப்பனர் இருக்கும் வாய்ப்பு அரிதிலும் அரிதானது என்று உணர்ந்திருந்ததால் அதை எப்பாடுபட்டும் இழக்க அவர்கள் தயாராக இல்லை. தமிழகத்தில் திடீரென முளைத்த தீபா எனும் பெங்களூரு காளானை ஆலமரம் போல தினமலர் சித்தரித்து முழு 'தீபாமலராக' மாறியுள்ளது இதற்கு மற்றொரு சான்று.
ஆக, ஜெவுக்கு ஊடகங்களிடமிருந்த மெனல்கெடல் தேவைப்படா ஆதரவும், கட்டுப்பாடுகளற்ற ஜால்ரா சத்தமும் சசிகலாவுக்கு இருக்காது. அவர்களைப் பொறுத்தவரை ஜெ எனும் பூசாரியைக் காக்க சசி ஒரு பலியாடு, அவ்வளவுதான். பூசாரியே போய்ச்சேர்ந்தபிறகு பலியாட்டின் தேவை எதற்கு? அதனால் ஏதோ ஜெ பொற்கால ஆட்சி நடத்தியதைப் போலவும் சசி காட்டாட்சி நடத்துவார் என்பது போலவும் சித்தரிக்கும் வேலை ஏற்கனவே துவங்கிவிட்டது. அதனால் ஜெவைவிட சசி சந்திக்கப்போகும் சவால்களும், விமர்சனங்களும் எல்லைகளற்றவை. பற்றாக்குறைக்கு பொதுமக்களின், அதிமுக தொண்டர்களின் ஆழ்மன வெறுப்பு வேறு!
இதையெல்லாம் கடந்து அவரால் இந்த நாண்காண்டுகளை முடிக்க முடிந்தாலே அது பெரும் சாதனை தான்.
-டான் அசோக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக