ஞாயிறு, 29 ஜனவரி, 2017

நெடுமா,வைகோ,சீமானின் பாஸ் நடராஜன் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை : மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்!


ஜல்லிக்கட்டு போராட்டக்களத்தில் வன்முறையை தூண்டியது திமுகதான் என்றும், அதற்கு காரணமான மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடராஜன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புதிய பார்வை ஆசிரியரும், அதிமுக பொதுச் செயலாளரின் கணவருமான நடராஜன் கூறுகையில், ஜல்லிக்கட்டுத் தொடர்பாக இனி எந்த தடையும் வராது. அதற்காக நான் டெல்லி சென்று இந்தியாவின் உயர் பதவியில் உள்ளவர்களை நேரில் சந்தித்து உறுதிமொழி வாங்கியுள்ளேன். எனவே ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழகத்தில் இளைஞர்கள் போராட வேண்டாம் .
மாணவ அமைப்பினர் நடத்திய அறவழி போராட்டத்தில் வன்முறையை தூண்டியவர்களை மக்கள் தண்டிக்க மாட்டார்கள். போராட்டக்களத்தில் வன்முறையை தூண்டியவர்கள் யார் என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. உரிய நேரத்தில் சமயம் வரும்போது அந்த ஆதாரத்தை நான் வெளியிடுவேன் என்றார்.
மெரீனாவில், மாணவர்கள் 6 நாள் போராட்டம் நடத்தியபோது எந்த அசம்பாவிதமின்றி அமைதியாக இருந்தவேளையில் போராட்டத்தில் திடீரென கலவரத்தை தூண்டியது திமுகதான். அதற்காக மு.க.ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலில் அதிமுகவை ரிமோட் கண்ட்ரோல் மூலமாக பின்னணியில் இருந்து இயக்கிவரும் நடராஜன் இதுவரை பிற அரசியல் கட்சிகள் குறித்து எதுவும் கருத்து தெரிவிக்காமல் அதிமுக கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றும் விதத்தில் காய் நகர்த்தி வந்தார். அதன் முதற்கட்டமாக, தனது மனைவி சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக்கியதையடுத்து முதல்வர் பதவியையும் கைப்பற்றத்திட்டமிட்ட நிலையில், சமய சந்தர்ப்பங்கள் அதற்கு இடமளிக்காமல் தற்போது முதல்வராக இருக்கும் பன்னீர் செல்வத்துக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதை கண்ட நடராஜன் அதற்கு செக் வைக்க திட்டமிட்டு வந்தார்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுத் தொடர்பான போராட்டம் போலீஸ் தடியடியில் முடிந்ததால், முதல்வர் பன்னீர் செல்வத்தின்மீது கரும்புள்ளி விழுந்தது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தும் விதத்தில் தற்போது பேட்டியளித்துள்ள நடராஜன் நேரடியாகவே திமுகவை கடுமையாகத் தாக்கி மு.க.ஸ்டாலின் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஆனால், கடந்த 27ஆம் தேதி மாலை, அதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் கூட்டத்தில், நடராஜனின் மனைவியும், அதிமுக பொதுச் செயலாளருமான சசிகலா பேசுகையில்கூட, நம்மைப் பிரிக்கவும், அழிக்கவும் எதிரான கட்சி சதி செய்கிறது என்றுதான் பேசினாரேத் தவிர ஒரு இடத்தில்கூட திமுக என்று குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக