திங்கள், 26 டிசம்பர், 2016

மதபோதகர்கள் என்னும் பித்தலாட்டக்காரர்கள்...

என்னதான் அறிவியல் முன்னேற்றம் இருந்தாலும் எவ்வளவுதான் படித்திருந்தாலும் மூட நம்பிக்கைகளிலிருந்தும் முட்டாள்தனமான சில செயல்களிலிருந்தும் இன்னும் வெளிவராமல் தான் நம்மில் பலர் இருக்கிறார்கள். ஜாதி பிரிவினைகள் வேண்டாம் என்கிறோம் மத நம்பிக்கைகள் கூடாது என்கிறோம் ஆனால் எங்கள் நம்பிக்கையைக் குறை சொல்ல நீங்கள் எல்லாம் யார் என்றும் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொண்டு எங்களையெல்லாம் முட்டாள்கள் என்று சொல்பவர்கள் தானே நீங்களெல்லாம் என்று பொதுவாக எல்லோருமே எல்லா பகுத்தறிவாளர்களும் கேட்பதுண்டு ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கவும் ஒழுக்கங்களைக் கற்பிக்கவும் மட்டும் இருந்தால் மத நம்பிக்கை இருக்கட்டும் என்று நாங்களும் வரவேற்போம். ஆனால் மதத்தை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தி மக்களின் உயிரையே காவு வாங்கும் மத போதகர்கள் என்ற பித்தலாட்டக் காரர்களிடம் சென்று உங்கள் பணத்தையும் பொருளையும் ஏன் உயிரையும் இழந்துவிடாதீர்கள் என்றுதான் ஒவ்வொருவரும் எச்சரித்துக்கொண்டிருக்கிறோம்.


குவைத் நாட்டில் திரு. ரவிச்சந்திரன் முத்துசாமி (புகைப்படத்தில் இருப்பவர்)குவைத் அம்மா பேரவையின் முன்னாள் தலைவராக இருந்திருக்கிறார். நன்கு படித்தவர். நல்ல நிறுவனத்தில் மேனஜர் ஆக இருந்திருக்கிறார். இந்துவாக இருந்தாலும் கிருத்துவ மதத்தின் மேல் ஈர்ப்புடையவராக இருந்திருக்கிறார். ஏசுவின் மீது அதீத நம்பிக்கை கொண்டே எல்லாக்காரியங்களையும் செய்திருக்கிறார். இளம் மனைவி இரண்டு குழந்தைகள்.

கடந்த 21-12-2016  ஆம் தேதி திடீரென்று   அவர் நெஞ்சு வலி உணர்ந்திருக்கிறார். அருகிலேயே மனைவியும் இருந்திருக்கிறார். மருத்துவமனைக்குச் -செல்லலாம் என அவரும் சொல்லவில்லை. மனைவிக்கும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தோன்றவில்லை .

 நெஞ்சுவலி அதிகமாக உணர்ந்தவர், இந்தியாவிலிருக்கும் ஒரு மத போதகருக்கு போன் செய்து தனக்கு அதிகமாக நெஞ்சு வலிக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.

அதற்கு அந்த மத போதகர் " எங்கே வலிக்கிறதோ அந்த இடத்தின் மேல் போன் ஐ  வைத்துக்கொள்ளுங்கள் நான் இங்கிருந்தே உங்களுக்காக ஜெபிக்கிறேன். போன் வழியாகவே என் ஜபம் உங்கள் நெஞ்சுக்குள் இறங்கி சுகமாக்கி விடும்  என்றும்  இயேசுவின் ரத்தத்தால் உங்களுடைய நெஞ்சுவலியை விரட்டி விடுகிறேன். இயேசு உங்களுக்கு பூரண சுகத்தைத் தருவார் என்றும்  சொல்லி இந்தியாவிலிருந்து ஜெபித்திருக்கிறார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஜெபித்திருக்கிறார்.

இரவிச்சந்திரனும் வலியோடு இருந்திருக்கிறார். அவர் மனைவியும் போன் பிடித்துக்கொண்டே இருந்திருக்கிறார். திடீரென்று இரவிச்சந்திரன் கீழே விழுந்து சுயநலம் இழந்திருக்கிறார். பிறகு தான் அவர் மனைவி அலறி அடித்து நண்பர்களை அழைத்திருக்கிறார். ஹாஸ்பிடலுக்கு கொண்டுபோயிருக்கிறார்கள். அனால் மருத்துவமனைக்குப் போகுமுன்னே அவர் உயிர் பிரிந்துவிட்டிருக்கிறது.

நெஞ்சு வலி வந்தவுடன் ஹாஸ்பிடலுக்கு போங்க என்று சொல்லாமல் கடவுள் நம்பிக்கை என்ற பேரில் எப்படி ஒரு அயோக்கியத்தனம் செய்திருக்கிறார் பாருங்கள் அந்த மத போதகர்.  இந்த மத போதகரை நம்பிக்கொண்டு எவ்வளவு முட்டாள் தனமாக இரவிச்சந்திரனும் அவர் மனைவியும்
இருந்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.

கண்முடித்தனமான இந்த நம்பிக்கையால் உயிரையே இழந்துவிட்டார் . இனி தனியாக இருந்துதான் இரு குழந்தைகளை வளர்க்க வேண்டும் அந்தப் பெண்.

இது சென்ற வாரம் நடந்த உண்மைச் சம்பவம். குவைத்
தந்தை பெரியார் நூலகக் காப்பாளர் செல்லபெருமாள் அய்யா அவர்கள் என்னிடம் கூறி  மிகுந்த வருத்தப்பட்டார்.

இப்படிப்பட்ட அயோக்கிய மத போதகர்களை கொலை செஞ்சாலும் தப்பில்லை என்று கூறி இதுபோன்ற முட்டாள் தனங்களுக்கெல்லாம் முடிவு எப்போதுதான் வரப்போகிறதோ... தந்தை பெரியார் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் இந்தமக்கள் திருந்தவில்லையே என்று வருத்தப்பட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக