ஞாயிறு, 27 நவம்பர், 2016

இந்தியா புடம் போட்ட தங்கமாக மின்னும்: மோடி! மன் கி பாத் நிகழ்ச்சியில் .. பாத்து!

ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பின்னர் பிரதமர் மோடி இன்று தனது மாதாந்திர ‘மன் கி பாத்’ வானொலி உரையாற்றியிருக்கிறார். அதில் அவர் பேசியதாவது: “தீபாவளியை நாட்டின் எல்லையில் போராடும் வீரர்களுடன் கொண்டாடினேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், ஊழலுக்கு எதிராகவும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. ஊழலுக்கு எதிரான போருக்கு ஆதரவளித்து சிரமத்தை எதிர்க்கொண்ட பொதுமக்களைப் பாராட்டுகிறேன். ஆனால், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக மக்களை தவறான வழியில் திசை திருப்புகிறார்கள். சிறந்த இந்தியாவை உருவாக்க மக்கள் தங்களை அர்ப்பணித்து கொண்டுள்ளனர்.

இப்போதும் சிலர் கறுப்புப் பணத்தை மாற்ற வழியை தேடுகிறார்கள். ஏழைகள் பயன்படுத்துகிறார்கள். ஏழைகளின் வங்கிக்கணக்கில் கறுப்புப் பணத்தை டெபாசிட் செய்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் வாழ்வில் விளையாடாதீர்கள். பதுக்கல்காரர்களை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டாம்.
நேர்மையற்ற மக்களுக்கு ஒன்றை செல்ல விரும்புகிறேன். உங்களை சீரமைத்து கொள்வதும், கொள்ளாததும் உங்களுடைய விரும்பம். சட்டத்தை மதித்து நடப்பதோ, நடக்காமல் இருப்பதோ உங்கள் இஷ்டம், என்ன செய்ய வேண்டும் என்பதை சட்டம் பார்த்துக்கொள்ளும். ஆனால் தயவுசெய்து நீங்கள் ஏழைகளின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள். பதிவுகளில் ஏழையின் பெயர் வந்து, பின்னர் புலனாய்வின்போது என் பிரியமான ஏழை, உங்கள் பாவச்செயல் காரணமாகப் பிரச்னையில் சிக்கும் வகையில் ஏதும் செய்யாதீர்கள். பினாமி சொத்துகள் தொடர்பாக மிகவும் கடுமையான சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது, இது அமலுக்கு வரவிருக்கிறது, அதில் நிறைய கஷ்டங்கள் ஏற்படும். நமது நாட்டு மக்களுக்கு எந்தவிதமான கஷ்டமும் ஏற்படக்கூடாது என்பதையே அரசு விரும்புகிறது. தற்போதைய மத்திய அரசின் நடவடிக்கை மிகப்பெரியது. இதில் இருந்து மக்கள் மீள 50 நாட்கள் ஆகும். ரொக்கப்பணம் இல்லாத சமுதாயம்தான் நமது கனவு. அதற்கான முதல்படியில் ஏறி இருக்கிறோம். தொடர்ந்து ரொக்கப்பணம் இல்லாத சமுதாயத்தை நோக்கி முன்னேறி விடுவோம். கறுப்புப் பணம் எனும் நோய் இந்தியாவை 70 ஆண்டுகள் பிடித்து இருந்தது. அந்த நோய்க்கு சிகிச்சைகள் அளிப்பது என்பது எளிதானது அல்ல. அதற்கு நீண்ட சிகிச்சையும், மருத்துவமும் தேவை. நவம்பர் 9ஆம் தேதிக்கு பிறகு ‘ரூ-பே’ அட்டையை பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி கிடைப்பதில்லை. அவர்களுக்கான கூலி வெள்ளை பேப்பரில் மட்டுமே இருக்கிறது. இனி நீங்கள் (தொழிலாளர்கள்) வங்கிக்கணக்கு தொடங்குங்கள். உங்கள் பிரச்னைகள் தீர்ந்துவிடும். ஆண்களும், பெண்களும், சிறு வியாபாரிகளும் டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனைக்கு மாறுவதற்கு இதுவே சரியான தருணம். ரொக்கப்பணம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க ஆன்லைன் பண பரிமாற்றமே நேர்மையான பாதுகாப்பான வழி என்பதை உணர்த்தும் ஏஜெண்டுகளாக இளைஞர்கள் திகழ்கிறார்கள். ஒவ்வொரு இளைஞரும் 10 குடும்பத்துக்காவது ரொக்கப்பணம் இல்லாத பொருளாதாரம் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். பணப்பரிவர்த்தனையில் பொதுமக்களுக்கு வங்கி ஊழியர்கள் அளிக்கும் பணி சிறப்பானது. தபால் நிலைய ஊழியர்களும், வங்கி ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள். சிறு, குறு வியாபாரிகள் ரொக்கப்பணம் இல்லாத முறைக்கு மாற வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏராளமான பணம் வந்துள்ளது. இதன் மூலம் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியும். கடந்த வருடத்தை விட அதிக விதைகள், உரங்கள் வாங்குவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு மாற்றுவழி கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்காக விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரூபாய் நோட்டு விவகாரத்தால் வரும் காலங்களில் இந்தியாவுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும். அரசுக்கும் நாட்டுக்கும் வெற்றி கிடைக்கும். ரூபாய் 500, 1000 நோட்டு செல்லாது என்ற நடவடிக்கையால் இந்தியா புடம் போட்ட தங்கமாக மின்னும்” என்று பெருமிதத்தோடு உரையாற்றியிருக்கிறார் மோடி.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக