![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiC94iaeJLQce37SrfTku7mCp0sB2zYyRCWQRvdoG7OvfMMzmiyzxNH6w8Ew3NS5QUtEx19FxNrV7YDTpjo5b0CUoHczQBRnz8BbNa7VBy9nA_ReINIINYXT-abRZo2TAqQT1Lh2yWbagQ/s280/c29.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYe55nsbMGghuzJtq-TAIXvZpJ3gkYpNL3oOm_Y8OrukTxSXNhog610UsTEZlsAJHLBQeZ1zEqgxxqQMspg0LRjxeUhVoogyvu_e-RKJzVdqdFghkMoRNXKI20JiFDHBt5BRKBRq4SKsg/s200/x5jj68xa.jpg)
அவருக்கு சிறுநீரகக் கோளாறா ? கல்லீரல் சிக்கலா ? அறுவை சிகிச்சையா என்று பரபரப்பான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த வதந்திகளை உண்மையாக்குவது போல, விகடன், நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்களும், பல்வேறு இணையதளங்களும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
நிர்வாக சீர்கேடு, ஊழல், உச்சநீதிமன்ற மேல் முறையீடு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களும் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டு, தற்போது ஜெயலலிதாவின் உடல்நிலை மக்களிடையே முக்கிய விவாதமாக மாறியுள்ளது. இதைத்தான் ஜெயலலிதா விரும்பினார். அது நடந்து விட்டது. ஜெயலலிதா எவ்வளவு பெரிய நடிகை என்பதற்கு ஆர்கே நகர் பிரச்சாரத்தின் போது அவர் பேசியதே சான்று. ஒரே ஒரு மெகாவாட் மின்சாரம் கூட, அதிமுக அரசு வகுத்த திட்டத்தினால் உருவாக்கப்பட வில்லை என்பது தெள்ளத் தெளிவாக அனைவரும் கண்டு வரும் உண்மை. ஆனால் ஜெயலலிதா கூசாமல் 4992 மெகாவாட் மின்சாரத்தை அதிமுக அரசு உருவாக்கியுள்ளது என்று பொய்யுரைக்கிறார். மக்களையும், ஊடகங்களையும் எந்த அளவுக்கு ஜெயலலிதா முட்டாள்கள் என்று கருதுகிறார் என்பதற்கு இதுவே சான்று. தமிழக மின் திட்டத்தின் நிலைமை என்ன என்பது குறித்த இந்த அட்டவணையைப் பாருங்கள்.
![CJU6W-LUAAAgKCN](https://i0.wp.com/www.savukkuonline.com/wp-content/uploads/2015/07/CJU6W-LUAAAgKCN.jpg?resize=599%2C562&w=400&quality=85&strip=all)
இதில் ஒரே ஒரு திட்டம் கூட அதிமுக அரசால் தொடங்கப்பட்டது அல்ல. இப்படியொரு நிலையில்தான் கூசாமல் பொய்யுரைத்தார் ஜெயலலிதா.
![11028967_704895676304629_2728794451702854216_n](https://i1.wp.com/www.savukkuonline.com/wp-content/uploads/2015/07/11028967_704895676304629_2728794451702854216_n.jpg?resize=250%2C303&w=400&quality=85&strip=all)
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 அன்று மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பு வெளிவருகையில் ஜெயலலிதா சசிகலா உள்ளிட்டோர், இப்படியொரு தீர்ப்பை துளியும் எதிர்ப்பார்க்கவில்லை. விடுதலை நிச்சயம் என்று ஏற்கனவே அவர்களுக்குத் தரப்பட்ட ஒரு போலியான தீர்ப்பின் அடிப்படையில், கொண்டாட்டத்தோடுதான் பெங்களுரு சென்றனர். ஆனால் அவர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்தார் மைக்கேல் டி குன்ஹா. இந்த முறை அப்படி எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த நாடகம்.
ஜெயலலிதா உடல்நிலை குறித்து செய்தி எப்போது கிளம்பியது, எப்படிக் கிளம்பியது என்பதை நாம் கவனமாக பார்க்க வேண்டும். செப்டம்பர் 27 அன்று கைது செய்யப்பட்டு, மீண்டும் ஜாமீனில் வெளிவரும் வரையில் ஜெயலலிதாவுக்கு பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை. தண்டனைக்காக அவர் சார்பில் வாதாடிய பி.குமார் தனது வாதத்தில் ஜெயலலிதாவுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மற்றும் தைராய்டு பிரச்சினைகள் இருப்பதாக கூறி வாதிட்டார். ஆனால் இவை அனைத்துக்கும் சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்படும் என்று குன்ஹா உத்தரவிட்டு, ஜெயலலிதா உள்ளிட்டோரை சிறைக்கு அனுப்பினார்.
![20150710093521](https://i1.wp.com/www.savukkuonline.com/wp-content/uploads/2015/07/20150710093521.jpg?resize=720%2C937&w=400&quality=85&strip=all)
ஒரு வேளை நாம் பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் தண்டிக்கப்படப் போகிறோம் என்பது ஜெயலலிதாவுக்கு முன்னதாகவே தெரியும் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். ஜெயலலிதா பெங்களுரு சென்றிருப்பார் என்றா நினைக்கிறீர்கள் ? ராமச்சந்திரா மருத்துவமனையில் படுத்திருக்க மாட்டார் ? ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவரை கர்நாடக காவல்துறை சென்னை வந்து கைது செய்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா ?
1996ல் அமலாக்கப்பிரிவு சசிகலா உள்ளிட்டோரை நீதிமன்றத்துக்கு வரவழைத்தபோது, மருத்துவமனை- யிலிருந்து ஒரு ஸ்ட்ரேச்சரில் படுத்ததபடி நீதிமன்றத்துக்கு வருகை தந்து நாடகம் ஆடியவர்தான் சசிகலா என்பதை மறந்து விடாதீர்கள்.
இப்போது ஜெயலலிதா ஆடி வரும் இந்த நாடகம், ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கும் சதித் திட்டமேயன்றி வேறு இல்லை. செப்டம்பர் 27ல் தண்டிக்கப்பட்டபோது இருந்த அனுதாப அலை, இப்போது இல்லை என்பதை ஜெயலலிதா நன்றாகவே அறிவார். ஊழல் மற்றும் மோசமான நிர்வாகம் போன்ற விவாதங்கள் அனைத்தும், உடல் நிலை சரியில்லை என்றால் அப்படியே தலைகீழாக மாறிப்போகும் என்பது ஜெயலலிதா நன்றாக அறிந்ததே.
இதற்கான சான்று, தமிழக வரலாற்றில் உள்ளது. 1984ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர் சென்று, மருத்துவமனையில் இருந்தபடியே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒரு முறை அதே போன்ற வெற்றியை ஈட்டலாம் என்ற திட்டமே தற்போது நடந்து வருவது.
மிக மிக கவனமாக திட்டமிட்டே இந்த நாடகத்தை ஜெயலலிதா நடத்தி வருகிறார். மே 11 தீர்ப்பு வெளியான பின்னர் நடந்த ஒவ்வொரு சம்பவங்களும், இந்த மேடை நாடகத்தின் காட்சிகளே. பதவியேற்பு விழாவை சுருக்கமாக முடித்தது. தலைமைச் செயலகத்தில் நடக்கும் காணொலி காட்சிகளுக்கு பத்திரிக்கையாளர்களை அழைக்காமல் விட்டது, சட்டமன்றக் கூட்டத்தொடரை நடத்தாமல் இருப்பது, பார்வையாளர்கள் யாரையும் சந்திக்காமல் இருப்பது, இப்தார் விருந்தை ரத்து செய்தது உள்ளிட்ட அனைத்தும், ஓரங்க நாடகங்களே. தனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அதை வெளிப்படையாக கூறும் நபர் அல்ல ஜெயலலிதா.
இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு செல்லத் தவறிய ஜெயலலிதா அனுப்பிய வாழ்த்துச் செய்தியை நாம் கவனமாக பார்க்க வேண்டும். “அ.தி.மு.க. சார்பில் நடத்தப்படும் இந்த இப்தார் நோன்பு திறப்பு விழாவில் வழக்கம் போல் நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும். எனினும், திடீரென்று ஏற்பட்ட உடல்நல குறைவின் காரணமாக இந்த விழாவிற்கு என்னால் நேரில் வர இயலவில்லை. என்னால் இந்த விழாவில் கலந்துகொள்ள இயலாவிடினும், எனது எண்ணங்கள் இந்த விழாவைச் சுற்றியே உள்ளன. எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், எனது உரையை இந்த விழாவில் படிக்குமாறு நான் பணித்துள்ளேன்.”
“விழாவில் கலந்து கொள்ள இயலாவிடினும், எனது எண்ணங்கள் இந்த விழாவைச் சுற்றியே உள்ளன” என்பது போன்ற நாடகத்தனமாக வசனங்களையெல்லாம் பேசும் நபர் அல்ல ஜெயலலிதா. மேலும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டால், அதற்காக மெனக்கெட்டு செய்தி அனுப்பும் வழக்கமும் ஜெயலலிதாவிடம் கிடையாது. முதன் முறையாக “திடீரென்று ஏற்பட்ட உடல்நலக் குறைவால்” என்ற வாசகத்தை நாம் கவனமாக பார்க்க வேண்டும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கையில், கவனமாக தலைமுடிக்கு கருப்புச் சாயம் பூசி, உதட்டுச் சாயத்தோடு பங்கேற்கும் ஜெயலலிதா, தன்னுடைய உடல் நலன் குறித்து இப்படியெல்லாம் வெளிப்படையாக கூறும் நபர் அல்ல. தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய வாசந்தி என்ற எழுத்தாளருக்கு எதிராக தடையுத்தரவு பெற்று, அந்த புத்தகத்தையே வெளிவராமல் செய்த நபர்தான் இந்த ஜெயலலிதா இணைப்பு . தடை உத்தரவு பெறுவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு கூட, பார்வையாளர்கள் யாரும் இல்லாமலேயே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜெயலலிதாவா தனது உடல்நிலை குறித்து வெளிப்படையாக அறிக்கை வெளியிடுவார் ?
ஜெயலலிதா சிறுநீரகம் அல்லது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சிகிச்சை என்ற பெயரில் ஒரு மாதம் ஓய்வெடுத்து விட்டு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அறுவை சிகிச்சை செய்யும் நேரத்தில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகையில், இந்த உடல்நிலையை காரணம் காட்டி, தண்டனை குறைவு அல்லது, விடுதலை செய்யப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா இல்லையா ?
ஜெயலலிதாவின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால், கூசாமல் பொய் கூறக்கூடிய நபர் அவர் என்பது தெளிவாகத் தெரியும். 1991 அரசாங்கத்தில் நெடுஞ்சாலைகளில் பேருந்துகளை வழிமறித்து கொள்ளைகள் நடைபெற்றன. அது குறித்து சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதா, மத்தியில் ஆளும் நரசிம்மராவ், ஜெயலலிதாவின் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று கொள்ளையர்களை தமிழகத்துக்கு அனுப்பி வைக்கிறார் என்றார். கொஞ்சமும், கூச்சம் இல்லாமல், அப்போதைய ஆளுனர் சென்னா ரெட்டி தனது கையைப் பிடித்து இழுத்தார், தவறாக நடக்க முயற்சித்தார் என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டவர்தான் இந்த ஜெயலலிதா. டான்சி வழக்கிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக, தலைமைச் செயலக கோப்பில், தான் போட்ட கையெழுத்து தன்னுடையதே இல்லை என்று கூசாமல் நீதிமன்றத்தில் கூறியவர்தான் ஜெயலலிதா. தன்னை அதிமுகவில் சேர்த்து ஆளான எம்ஜிஆருக்கே துரோகம் செய்ய நினைத்தவர்தான் ஜெயலலிதா. எம்ஜிஆர் மருத்துவமனையில் இருக்கிறார். அவரால் சரிவர ஆட்சி நடத்த முடியவில்லை. ஆகையால் அவருக்கு பதிலாக என்னை முதலைமைச்சராக நியமியுங்கள் என்று 1984ம் ஆண்டு ராஜீவ் காந்திக்கும் ஆளுனர் குரானாவுக்கும் கடிதம் எழுதியவர்தான் ஜெயலலிதா. இந்த விபரம் தெரிந்ததும் ஜெயலலிதாவுக்கு வழங்கியிருந்த நாடாளுமன்ற மாநிலங்களவை அதிமுக துணை தலைவர் பதவியை பறித்தார் எம்ஜிஆர். இதையடுத்து, அதிமுகவுக்கு உள்ளாகவே, “ஜெயலலிதா பேரவை” என்ற புதிய அமைப்பை தொடங்கினார் ஜெயலலிதா. 33 எம்எல்ஏக்களை தன் பக்கம் சேர்த்து, தனிக்கட்சி தொடங்கப் போவதாகக் கூட அறிவித்தவர்தான் இந்த ஜெயலலிதா.
இப்படி தன்னுடைய நலனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் ஜெயலலிதாதான் தற்போது உடல்நிலை குறித்த இந்த நாடகத்தை நடத்தி வருகிறார். உடல்நிலை குறித்த தகவல்கள் மிக மிக கவனமாக பரப்பப்படுகின்றன. போயஸ் தோட்டத்துக்கு உள்ளே சென்று வரக்கூடியவர்களில் பலர், தங்களுக்குத் தெரிந்த பத்திரிக்கையாளர்களை அழைத்து, இந்த செய்திகளை தெரிவிக்கின்றனர். மாநில உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும், இந்த பொய்யை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
![2014_06_03_12_14_09_Jayalalitha-1](https://i2.wp.com/www.savukkuonline.com/wp-content/uploads/2015/07/2014_06_03_12_14_09_Jayalalitha-1.jpg?resize=600%2C400&w=400&quality=85&strip=all)
ஜெயலலிதாவின் இந்த நாடகம், 1984 எம்ஜிஆர் வென்றதைப் போன்று, தேர்தலிலும், வழக்கிலும் வெற்றிக் கனியை ஈட்டித்தருமா அல்லது, திரை மூடப்பட்டு, நாடகம் கடும் தோல்வியை அடையுமா என்பதற்கு காலம்தான் விடை சொல்ல வேண்டும். savukkuonline.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக