ஞாயிறு, 30 அக்டோபர், 2011

அமைச்சரே.. புரட்சித் தலைவி பெங்களூருவில் இருந்து வந்து விட்டாரா?

Viruvirupuசென்னை, இந்தியா: தமிழக அமைச்சர்கள் சிறிது காலமாக ஒரு விஷயத்தில் நிம்மதியாக இருந்தார்கள். சேச்சே.. ‘வரவேண்டியவை’ ஒழுங்காக வந்து சேர்கின்றன என்ற நிம்மதி பற்றியல்ல நாம் கூறுவது! இது வேறு விஷயம். நாளைக் காலையில் படுக்கையில் இருந்து எழும்போதும் நாம் அமைச்சர்கள்தான் என்ற நிம்மதி இது!!
காரணம் அம்மா ரொம்ப பிஸி. ராஜிவ் கொலை வழக்கு பற்றிய சர்ச்சைகள். அது முடிய, உள்ளாட்சி கூட்டணி இழுபறிகள், அத்தோடு சேர்த்து, பெங்களூரு வழக்கு, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்… இந்த டைட்-ஸ்கெட்யூலில் கவர்னர் மாளிகைக்கு செல்ல நேரம் ஒதுக்க முடியாது.
அதனால் இவ்வளவு நாட்களும் அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லை.
இப்போது, அமைச்சரவை மாற்றங்கள் பற்றிய வதந்திகள் மீண்டும் இறக்கை கட்டிப் பறக்கத் தொடங்கிவிட்டன.
கோட்டையில் எதிர்ப்படும் அமைச்சர்களே ஒருவித மிரண்ட பார்வையுடன்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். (நல்லவேளையாக கையைக் கிள்ளிப் பார்த்துக் கொள்வதில்லை)
இன்றைய திகதியில் அ.தி.மு.க. வட்டாரங்களில் சூடாக அடிபடும் வதந்தி, “அம்மா கையில 7 அமைச்சர்கள் பேரு அடங்கிய பட்டியல் இருக்காமே!” இவர்கள் சொல்லும் பட்டியல் ‘அவுட்-கோயிங்’ பட்டியல். சாதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர்கள் ஆர்வப்படுவது மற்றொரு பட்டியல். அது, இன்-கம்மிங் லிஸ்ட்!
இன்-கம்மிங் லிஸ்ட்டில், தலித் எம்.எல்.ஏ. ஒருவருக்கு சான்ஸ் அடிக்கும் என்கிறார்கள். (இறந்துபோன அமைச்சர் கருப்பசாமி தலித் என்பதால் கட்சியில் உள்ள தலித் ஒருவருக்கு  வாய்ப்புக் கிடைக்கும் என்ற கால்குலேஷன்)
அவுட்-கோயிங் லிஸ்ட் பற்றிய வதந்தியில் உண்மை கிடையாது என்று அடித்துச் சொல்ல முடியாது என்கிறார்கள். கடந்த சட்டசபைக் கூட்டத் தொடரின்போது ‘சொதப்பிய’ அமைச்சர்கள் சிலர் உள்ளனர். செயலாளர் எழுதிக் கொடுத்த குறிப்புகளை வைத்துக்கொண்டு கோர்வையாக பதில் கூறத் தெரிந்திராத அமைச்சர்களும் உள்ளனர்.
இவர்களில் சிலருக்கு விரைவில் எக்சிட்-விசா குத்தப்படும் என்றுதான் தெரிகின்றது.
இந்த வகையில் மூன்று அமைச்சர்கள் மகா சிக்கலில் இருக்கிறார்கள். மூவரில் ஒருவரது தலை தப்பும் அளவுக்கு ‘வேறு செல்வாக்கு’ உண்டு. மற்றைய இருவரும் திருதிரு.
இவர்களைவிட மற்றொரு அமைச்சர்மீது இப்போதே புகார்கள் வரிசையாகச் செல்லத் தொடங்கியுள்ளன. இவற்றில் அநேக புகார்கள் சொந்த மாவட்டத்தில் இருந்து வருவதுதான் சோகம். கோஷ்டி சேர்த்து செயற்படுகிறார் என்றும் இதே அமைச்சர்மீது குற்றச்சாட்டு உண்டு. முதல்வர் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றபோது, கோஷ்டி விவகாரம் பற்றி மற்றையவர்களிடம் விரிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டாராம்.
அதனால், இவரும் வாயிலைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.
திருவிழா எப்போது? பெங்களூரு விசாரணை முடிந்த கையோடு, கவர்னர் மாளிகை ட்ரிப்தான் என்று கூறி, அமைச்சர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக