திங்கள், 10 அக்டோபர், 2011

நாங்கள் எங்கள் மக்களுக்கு மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டோம்

sarachandranபுலிகளுக்கு ஆயுதம் வழங்கியதற்காக சிறையில் வாடும் கனடியத் தமிழர்கள் வன்முறையை நிராகரிக்கிறார்கள்   (பகுதி 1)
-   நஷனல் போஸ்ட்டுக்காக மைக்கல் சியு
(சரச்சந்திரன் சண்முகம் தனது மகனைப் பற்றிப் பேசுகிறார்)
ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா கிளர்ச்சியாளர்களுக்காக ஆயுதக் கொள்வனவு செய்யும்போது கைதான மூன்று கனடியர்கள் சிறையிலிருந்து கையொப்பமிட்டு அனுப்பியுள்ள பகிரங்கக் கடிதம் ஒன்றில் தாங்கள் செய்தது தவறு என்று ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அரசியல் வன்முறைகளையும் நிராகரித்துள்ளார்கள்.
எங்கள் இலட்சியத்தை வன்முறை மூலம்தான் அடைய முடியும் என நாங்கள் தவறாக நம்பி விட்டோம். நாங்கள் செய்தது ஸ்ரீலங்காவில் நிலவும் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு ஒன்றை எட்டுவதற்கு உதவி செய்யாது என இப்போது நாங்கள் உணருகிறோம்” என அவர்கள் எழுதியுள்ளார்கள்.
ஸ்ரீலங்காவின் நீண்ட உள்நாட்டு யுத்தத்தின் போது எல்.ரீ.ரீ.ஈ எனப்படும் தமிழ் புலிகளுக்கு ஆயுத வினியோகம் செய்யும் சர்வதேச ஆயுதக் கொள்வனவு வலையமைப்பின் ஒரு அங்கமாகவிருந்த இந்த ரொரான்ரோ நபர்கள் ஆயுதப் போராட்டத்தை நிராகரித்திருப்பது  முற்றுமுழுதான ஒரு தலைகீழ் திருப்பமாகும். ஆனால் நியுயார்க்கில் 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிலத்திலிருந்து ஆகாயத்துக்கு ஏவப்படும் எறிகணைகளையும் மற்றும் ஏகே – 47 ரக துப்பாக்கிகளையும் கொள்வனவு செய்ய முயன்று பிடிபட்டபோது அந்தக் குற்றம் அவர்களுக்கு 25 வருட சிறைத்தண்டனையை சம்பாதித்துக் கொடுத்தது, அதிலிருந்து அவர்கள் மனமாற்றம் அடைந்து விட்டார்கள் என வெளிப்படையாகத் தெரிகிறது.
“நாங்கள் ஒவ்வொருவரும் முடிவுக்கு வந்திருப்பது,எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனைக்கான நாங்கள் புரிந்துள்ள குற்ற நடவடிக்கை சகல ஸ்ரீலங்காப் பிரஜைகளுக்குமே மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய செய்கை என்று” இவ்வாறு சத்ஹஜன் சரச்சந்திரன், திருத்தணிகன் தணிகாசலம் மற்றும் சஹிலால் சபாரட்னம் ஆகிய மூவரும் எழுதியுள்ளனர்.
“ஆயுத வன்முறை என்கிற எல்.ரீ.ரீ.ஈ சித்தாந்தத்துக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் தமிழ் மக்களுக்கு சமாதானத்தை கொண்டு வர முடியும் என் நாங்கள் தவறாக நம்பி விட்டோம். இப்போது நாங்கள் அந்த எண்ணத்திலிருந்து தூர விலகிவிட்டோம்” என்று தெரிவிக்கிறது நியுயோhக் புரக்லீனில் உள்ள அவர்களது சிறைச்சாலையிலிருந்து ஆகஸ்ட் 21ந் திகதி அவர்கள் ஒவ்வொருவரினாலும் கையொப்பமிட்டு எழுதப்பட்ட கூட்டுக் கடிதத்தில் எழுதப்பட்டள்ளது. நஷனல் போஸ்ட் பிரத்தியேகமாக பெற்றுக்கொண்ட அந்தக்கடிதம் வரும் நாட்களில் பகிரங்கமாக வெளியிடப்பட உள்ளது.
கூட்டாட்சி அமைப்பால்; தடை செய்யப்பட்ட பிரிவினைவாத ஆயுதக் குழுவும் ரொரான்ரோவில் நீண்ட காலமாக தீவிரமாக செயற்பட்டு வருவதுமான தமிழ் புலிகளுடன் தொடர்புள்ள தீவிர கனடிய ஆதரவாளர்களினால் அரசியல் வன்முறை நிராகரித்து ஒதுக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை.
இது வெளிவருவது ஒன்ராறியோவில் உள்ள இந்தக் கைதிகளின் உறவினர்கள் இவர்களை கைதிகள் இடமாற்றத்தின் கீழ் கனடாவுக்கோ அல்லது ஸ்ரீலங்காவுக்கோ மாற்றும் படியான கருணை கோரி வருவதானால்தான். மற்றும் அது அரசாங்கத்துக்கு ஒரு கடிமான கேள்வியாக உள்ளது. பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளவர்கள் மனம் வருந்தி மன்னிப்புக் கோரினால் அவர்கள் கருணை காட்டப்படும் தகுதிக்கு உள்ளாகிறார்களா?
சில நிபுணர்கள் வாதிப்பது உயர் சுயவிபரமுடைய முன்னாள் போராளிகள் பகிரங்கமாக தங்கள் கடந்தகால நடவடிக்கைகளுடன் இப்போது தொடர்பு இல்லை எனத் தெரிவிப்பதன் மூலம், ஆயுதக்குழுக்கள் வன்முறையை நியாயப்படுத்த கூறும் கதைகளையும் மற்றும் புதியவர்களை சேர்த்துக் கொள்ளும் முயற்சிகளையும் தாக்கத்துக்கு உட்படுத்தி குறைப்பதற்கு முடியும் என்று.
“ஒரு பகிரங்க மனவருத்தம், குழுவிலிருந்து பிரிந்து விட்டதாக தெரிவிக்கும் ஒரு பகிரங்க அறிவிப்பு உண்மையில் மற்றவர்களுக்கு அக்குழுவுடன் தொடர்பு கொள்ள முயலும் சட்டபூர்வ தன்மை மற்றும் கவர்ச்சி என்பனவற்றைக் குறைத்து விடும். குறிப்பாக விலக முனைபவர்கள் தங்கள் கரங்களில் இரத்தக்கறை படிந்துள்ளது என்று தெரிவிக்கும்போதுதான்” என்று கூறியுள்ளார் பென்சியல்வானியாவின் அரச பல்கலைக்கழகத்தின் பயங்கரவாத கற்கைகளுக்கான சர்வதேச நிலையப் பணிப்பாளர் ஜோண் ஹோர்கன்.
ஸ்ரீலங்காப் படைகளுக்கும் தமிழ் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களாகி விட்டன. தமிழ் புலிகள் தங்கள் முயற்சிக்காக கனடாவிலிருந்து மில்லியன் கணக்கில் நிதி திரட்டியதுடன், ரொன்ரோவிலும் ஒட்டவாவிலும் உள்ள அவர்களின் ஆதரவாளர்களினால் கொடிகளை வீசி உற்சாகப் படுத்தப்பட்டார்கள். இந்த மனிதர்கள் தாங்கள் முன்பு வகித்த நிலைகளை இப்போது நிராகரிப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
31 வயதான சரச்சந்திரன் ரொரான்ரோ பகுதியின்; தமிழ் இளைஞர் அமைப்பின் முன்னாள் தலைவர். அதேவேளை 32 வயதான சபாரட்னம் நாட்டின் முன்னணி அமைப்பான கனடியன் தமிழ் காங்கிரசின் தொடர்பாடல் பணிப்பாளர், 43 வயதான தணிகாசலம் இவரது மைத்துனர்.
“இங்கே மூன்று தமிழ் நபர்கள் தங்கள் நிலைப்பாட்டினை மிகவும் பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்கள். இவர்கள் ஸ்ரீலங்கா மக்களிடையே மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை, அவர்கள் கனடியப் பிரஜைகளாக இருப்பதால் ஸ்ரீலங்காவுக்கு வெளியே வாழும் பெருந்தொகையான தமிழ் இனத்தவர்களின் மனங்களிலும் பாதிப்பை உண்டாக்க முடியும்” என்று இவர்களின் நியுயார்க் வழக்கறிஞரான லீ கின்ஸ்பேர்க் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். இவர்களது கூட்டறிக்கைக்கு மேலதிகமாக அவர்கள் ஒவ்வொருவரும் கனடாவில் உள்ள தமிழ் இனத்தவர்கள் ஆயுதம் தாங்கிய பிரிவினைவாதிகளின் பிரச்சாரத்தை கைவிட்டு அதற்குப் பதிலாக ஸ்ரீலங்காவை மீளக் கட்டியெழுப்ப உதவும்படி கேட்டு தனிப்பட்ட முறையில் நீண்ட கடிதங்களையும் எழுதியுள்ளார்கள்.
“ஆயுதங்களைப்பற்றிய ஒரு இரண்டாவது பேச்சைக்கூட நாங்கள் பேசாதிருக்க வேண்டும்” என்று தணிகாசலம் எழுதியுள்ளார், ”இவைகள் யாவற்றிலுமிருந்து நாங்கள் சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். எந்த ஒரு காரியத்துக்கான பதிலும் யுத்தம் என்பதல்ல. ஒரு ஆயுதத் தாக்குதலுக்கு ஆதரவளித்து நாங்கள் எங்கள் மக்களுக்கு மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டோம்” என்று சபாரட்னம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சரச்சந்திரன் எழுதியிருப்பது,” எதற்கும் இரத்தம் ஒரு பதில் அல்ல, வன்முறையை ஊக்குவிக்கும் எந்த ஒரு பாதையையும் உங்களில் ஒருவரும் தெரிவு செய்யக்கூடாது என உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று.
கூட்டாட்சி அமைப்பின் குற்றவாளிகள் தங்கள் தண்டனையின் குறைந்தது 85 விகிதத்தையாவது அனுபவிக்க வேண்டியுள்ளதால், இன்னும் 16வருட சிறைவாச காலத்தை எதிர்நோக்கியுள்ள இவர்கள் திரு.கின்ஸ்பேர்க்கின் உதவியுடன் அமெரிக்காவை விட்டு இடம் மாறுவதற்கான உதவியைத் தேடுகிறார்கள். கனடா அமெரிக்காவுடன் ஒரு கைதிகள் இடமாற்ற உடன்படிக்கையை செய்திருக்கிறது. ஆனால் அவர்களைத் திரும்ப ஏற்றுக்கொள்வதற்கு ஒட்டவா சம்மதிக்க வேண்டும்.
அத்தோடுகூட அவர்கள் பிறந்த இடமான ஸ்ரீலங்காவுக்கு இடம்மாறுவதைக் குறித்தும் அவர்கள் பரிசீலித்துக் கொண்டிருக்கிறார்கள். 2009ல் ஸ்ரீலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து, மோதலின்போது பிடிபட்ட கிட்டத்தட்ட 11,000 வரையான தமிழ் புலிப் போராளிகள் மறுவாழ்வு அளிக்கப்பட்டதின் பின்னர் விடுவிக்கப் பட்டுள்ளார்கள. இந்த மூன்று கனடியர்களும் ஸ்ரீலங்கா தங்களை ஏற்றுக் கொண்டு இத்தகைய பரிகாரத்தை வழங்கும் என்று நம்புகிறார்கள்.
“அவர்கள் கனடியப் பிரஜைகள். ஆனாலும் கனடாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும். மற்றும் அவர்களை ஏற்றுக்கொள்வதால் என்ன அரசியல் நலன்கள் கிடைக்கும் என்பது அத்தனை தெளிவாக இல்லை” என்று தெரிவித்தார் திரு.கின்ஸ்பேர்க். ”எங்களிடம் ஒருவகையான நம்பிக்கையும் மற்றும் எனது கட்சிக்காரர்கள் விடயத்தில் எல்.ரீ.ரீ.ஈ சார்பாக வன்முறையுடன் தொடர்பு பட்டிருந்த ஸ்ரீலங்கா பிரஜைகளுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் என்ன செய்ததோ அதே போன்ற நலன்களைப் பின்பற்றி இவர்களும் மறுவாழ்வு பெறுவதைக் காணும் அவாவினைக் கொண்டிருக்கும் என்கிற நிலைப்பாடும் உள்ளது - முக்கியமாக அதற்கு மேலும் ஏனெனில் இவர்களின் விடயம் மிகவும் பிரசித்தமானது என்பதால்;.
ரொன்ரோவின் சுற்றுப்புறப் பகுதியான மார்க்கமில் ஒரு உணவு அறையின் மேசைக்கு முன்னாலிருந்து சரச்சந்திரனின் தந்தையான சரச்சந்திரன் சண்முகம் பேசும்போது தனது மகன் கிளர்ச்சியாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதை அவருடைய கைதைப்பற்றி வானொலியில் கேட்கும்வரை தான் அறிந்திருக்கவில்லை எனத் தெரிவித்தார்.
அவரது மகன் செய்தது தவறு என்பதில் அவருக்கு குழப்பம் எதுவுமில்லை,ஆனால் அதற்காக மன்னிப்பு வழங்குவதற்கான சில நடவடிக்கைகள் உண்டென அவர் நம்புகிறார். போர் முடிவடைந்துவிட்டது,தமிழ் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள்,மற்றும் தமிழர்களின் மீதுள்ள நல்லெண்ண நம்பிக்கையாக அவரது மகனுக்கு ஒரு இரண்டாவது சந்தர்ப்பத்தை வழங்குவது யுத்தத்தின் பின்னான சமரச முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும். கடந்த மே மாதம் இலாப நோக்கற்ற ஒரு அமைப்பான தமிழ் கைதிகளிடம் கருணை காட்டுங்கள் என்கிற அமைப்பை ஆரம்பிக்க திரு.சண்முகம் கூட்டாக நிதி வழங்கியுள்ளார். அதன் நோக்கம் ஸ்ரீலங்காவில் நடந்த மோதல்களின்; விளைவாக தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களுக்கு குரல் கொடுப்பதாகும் ஆனால் இதன் மூன்று பணிப்பாளர்களும் சரச்சந்திரன்,தணிகாசலம்,மற்றும் சபாரட்னம் ஆகியோரது உறவினர்களே.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக