செவ்வாய், 13 செப்டம்பர், 2011

கோவில் மிருகபலிகளை தடுத்த அமைச்சர் மேர்வின் சில்வா முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன்



ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்..!முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோவிலில் இன்று இடம்பெறவிருந்த மிருக பலிப்பூஜையை அமைச்சர் மேர்வின் சில்வா தடுத்து நிறுத்தியுள்ளார்.முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோவிலில் வருடாந்த உற்சவத்தின்போது நூற்றுக்கணக்கான ஆடுகள், கோழிகள் பலிகொடுக்கப்படுவது வழக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த மிருகபலி பூஜை நடைபெறவிருந்த நிலையில் அமைச்சர் மேர்வின் சில்வா சுமார் 50 பேர் கொண்ட குழுவொன்றுடன் அவ்விடத்திற்கு வந்து மிருகங்கள் பலிகொடுக்கப்படுவதை தடுத்தார். அமைச்சருடன் வந்தவர்கள் பலிகொடுக்கப்படவிருந்த மிருகங்களை வாகனங்களில் ஏற்றிச்சென்று சிலாபம் பொலிஸ் நிலையத்தில் அவற்றை ஒப்படைத்தனர். ஆலயத்தில் நடைபெறும் பூஜை நடவடிக்கைகளுக்கு தாம் எந்த இடையூறும் செய்யவில்லை எனவும் மிருகங்களை பலிகொடுப்பதற்கு மாத்திரமே தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா கூறினார். 'இது மத ரீதியான பிரச்சினை அல்ல. மிருகங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையே இது. களினியிலும் இத்தகைய நடவடிக்கைகளை நான் தடுத்து நிறுத்தினேன். இப்போது நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைபெறும் மிருக பலிகளையும் தடுப்பதற்கு தீர்மானித்துள்ளேன்' என செய்தியாளர்களிடம் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் நடைபெறவுள்ள மிருகபலி வேள்வியை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்தரகாளியம்மன தேவஸ்தானத்தில் வருடாந்தம் இடம்பெறும் மிருக பலி பூஜையினை நடாத்துவதற்கு சிலாபம் மாவட்ட நீதிமன்றம் நேற்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த மிருக பலி பூஜை இன்று இடம்பெறவிருந்த நிலையிலேயே சிலாபம் நீதவான் ஆர். எம். ஜயவர்தன இந்த தடையுத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக