செவ்வாய், 13 செப்டம்பர், 2011

தேசிய அரசிலில் குதிக்கிறார் நரேந்திர மோடி!: பாஜக தேசியத் தலைவராகிறார்!!



Narendra Modi
டெல்லி: 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவர வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, அம் மாநில முதல்வர் நரேந்திர மோடியை தேசிய அரசியலில் ஈடுபடுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

அவரை பாஜக தேசியத் தலைவராக்கவும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

குஜராத் மாநிலத்தில் நடந்த பயங்கர மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்டனர். கலவரக் கும்பலை மோடி கட்டுப்படுத்ததால் தான் அவ்வளவு பெரிய அளவில் உயிர்ப் பலிகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி முன்னாள் சிபிஐ இயக்குனர் ராகவன் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. அந்தக் குழு வழங்கிய அறிக்கையில் மோடி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அளவுக்கு ஆதாரங்கள் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

இந் நிலையில் அகமதபாத் நகரில் குல்பர்க் சொசைட்டியில் நடந்த பயங்கர வன்முறையில் 69 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நரேந்திர மோடிக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இது தொடர்பாக விசாரிக்க மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமசந்திரனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த அறிக்கையை அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் மோடிக்கு வன்முறையில் தொடர்பில்லை என்று சிறப்பு விசாரணைக் குழு கூறியுள்ள கருத்தை அவர் வன்மையாக கண்டித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் ராஜூ ராமச்சந்திரனின் அறிக்கை மீது உச்ச நீதிமன்றம் நேற்று தனது உத்தரவைப் பிறப்பித்தது.

நீதிபதிகள் ஜெயின், சதாசிவம், ஆப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் அளித்தத் தீர்ப்பில், சிறப்பு விசாரணைக் குழு தனது இறுதி விசாரணை அறிக்கையை அகமதாபாத் கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

இதை கீழ் கோர்ட் மாஜிஸ்திரேட் விசாரித்து, முதல்வர் நரேந்திர மோடியையும் விசாரிக்க வேண்டுமா அல்லது ஷாகியா ஜாப்ரியின் வழக்கை மூட வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். மோடிக்கு எதிரான வழக்கை முடித்து கொள்ள மாஜிஸ்திரேட் நினைத்தால் இசன் ஜப்ரியின் விதவை மனைவியை அழைத்து அவர் கருத்தை கேட்க வேண்டும்.

இந்த வழக்கை இனியும் நாங்கள் தொடர்ந்து மேற்பார்வையிட வேண்டிய அவசியம் இருப்பதாகக் கருதவில்லை என்று கூறிவிட்டனர்.

இதன்மூலம் இந்த விவகாரத்தில் மோடிக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் நரேந்திர மோடி தேசிய அரசியலில் ஈடுபடுவதற்கு இருந்த தடை விலகி விட்டதாக பாஜக கருதுகிறது.

வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அவரை கட்சியின் தலைவராக்கிவிட அவரது ஆதரவாளர்களாக ஒரு பிரிவு பாஜகவினர் முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையே குஜராத் சட்டசபையின் பதவி காலமும் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ளது. நரேந்திர மோடி மீது குஜராத் கலவர வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால் அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் கூறப்படுகிறது.

மேலும் தற்போதைய பாஜக தலைவர் நிதின் கட்காரியின் 3 ஆண்டு பதவி காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் மோடியை தலைவராக்கி அவரை முழு அளவில் தேசிய அரசியலில் ஈடுபடுத்த பாஜகவில் ஒரு பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்பாக அருண் ஜெட்லி உள்ளிட்ட சில மூத்த பாஜக தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் ஆகியவற்றின் ஆதரவு நரேந்திர மோடிக்கு உள்ளது.

இதற்கிடையே அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தன்னை பிரதமர் பதவிக்கு முன் நிறுத்திக் கொள்ளும் வகையில், பாஜக மூத்த தலைவரான அத்வானி தேசிய அளவில் ரத யாத்திரையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதும் குறி்ப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக