ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

யாழ். மாவட்டத்தில் ஏழு பொலிஸ் கண்காணிப்பு குழு

யாழ். மாவட்டத்தில் ஏழு பொலிஸ் கண்காணிப்பு அணிகளை நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாக யாழ்.பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிஜேரா தெரிவித்துள்ளார்.
யாழ். குடாநாட்டில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலைகள் தொடர்பாகவும் சமூக மற்றும் கலாசார சீர்கேடுகளை கட்டுப்படுத்துதல் தொடர்பான உயர் மட்டக் கலந்துரையாடல் ஒன்றில் ஈ.பி.டி.பியின் பிரதிநிதிகளிடமே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
கூட்டம் தொடர்பில் ஈ.பி.டி.பி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
குடாநாட்டில் பரவலாக இனந்தெரியாத நபர்களினால் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெண்கள் மற்றும் பாடசாலைகள் மாணவிகள் மீதான வன்முறைகள், சமூக விரோத செயற்பாடுகளான கசிப்பு உற்பத்தி போதைப்பொருள் விற்பனை கொலை மற்றும் கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தல் சமூக மற்றும் கலாச்சார சீர்கேடுகளை கட்டுப்படுத்துதல், சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்துதல், யாழ்.குடாநாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையை முடிவிற்கு கொண்டு வந்து நிலையானதும் அமைதியானதுமான ஓர் சூழ்நிலையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் முன்வைக்கப்பட்டது.
இதேவேளை நாவாந்துறை, பாசையூர், கொக்குவில் ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை போன்று தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாதிருப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளினை மேற்கொள்வதன் அவசியம் தொடர்பாகவும் வலியுறுத்தப்பட்டது.

இதன்போது மாவட்டம் தழுவிய ரீதியாக ஏழு பொலிஸ் கண்காணிப்பு அணிகளை நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் இதன் மூலம் பிரதேசங்களில் சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் பிரதேச மட்ட பிரதிநிதிகளை தெரிவு செய்து ஒன்றிணைப்பதன் ஊடாக குற்றச்செயல்களை வெகுவாக கட்டுப்படுத்த முடியும் என யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்ததுடன் இவ்வாறான கலந்துரையாடலை மாதந்தோறும் நடாத்தி பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவது என இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக