செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

டில்லி எமக்கு அழுத்தம் கொடுக்காது,TNA யுடன் பேசினாலும்,தினேஷ் குணவர்த்தன

தமிழ் கட்சிகளை டில்லிக்கு அழைத்து பேசினாலும் இந்தியா எமக்கு எந்தவிதமான அழுத்தங்களையும் கொடுக்காது: தினேஷ் குணவர்த்தன

இலங்கையிலிருந்து எட்டு சிறுபான்மை அரசியல் கட்சிகளை அழைத்து அரசியல் விடயங்கள் குறித்து இந்தியா விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை புது விடயமல்ல. கடந்த 50 வருடங்களாக இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றுவருகின்றன. இது தொடர்பில் இந்தியா எமக்கு அறிவிக்கும். ஆனால் இவ்வாறான பேச்சுவார்த்தைகளில் முன்வைக்கப்படும் யோசனைகளைக்கொண்டு இந்தியா எமக்கு எந்தவிதமான அழுத்தங்களையும் முன்வைக்காது என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
இந்தியா எப்போதும் எந்த விடயம் தொடர்பிலும் இலங்கைக்கு அழுத்தம் தெரிவித்தது கிடையாது. மேலும் அண்மையில் பாராளுமன்ற தூதுக்குழுவினர் இந்தியாவுக்கு சென்றிருந்தபோது இலங்கை நிலைமைகள் தொடர்பில் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தயாவில் விரைவில் அரசியல் விவகாரம் குறித்த கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளவுள்ளதாகவும் அதில் இலங்கையிலிருந்து எட்டு சிறுபான்மை கட்சிகள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் வெளிவரும் தகவல்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்: இந்தியாவில் நடைபெறவுள்ள கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொள்ளும் பொருட்டு இலங்கையிலிருந்து சிறுபான்மை கட்சிகள் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான கலந்துரையாடல் என்பது புதிய விடயமல்ல. வழமையாக இதுபோன்ற கலந்துரையாடல்கள் நடைபெறும். அவற்றுக்கு முன்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தார்கள். இம்முறை அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் கடந்த 50 வருடங்களாக இதுபோன்ற கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. எனவே இதனை புதிய விடயமாக பார்க்கவேண்டியதில்லை. இவ்வாறான கலந்துரையாடல்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் விடயங்கள் குறித்து இந்தயா எமக்கு அறிவிக்கும்.
அதாவது இவ்வாறான யோசனை ஒன்று வந்துள்ளது என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் இலங்கைக்கு இந்தியா கூறும். மாறாக இவை தொடர்பில் எந்தவிதமான அழுத்தங்களையும் வெளியிடாது. எப்போதும் இந்த விதமான அழுத்தங்களை இந்தியா விடுத்ததில்லை.
இதேவேளை இலங்கையிலிருந்து பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்தது. அதில் நானும் இடம்பெற்றிருந்தேன். அப்போது எம்மிடம் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் இலங்கை நிலைவரம் தொடர்பான கேட்டறிந்தனர். குறிப்பாக வடக்கின் நி“லைமை குறித்து கேட்டறிந்தனர்.
அபிவிருத்தி பாதுகாப்பு வீட்டுத்திட்டங்கள் மீன்பிடி விவசாயம் உள்ளிட்ட நிலைமைகள் குறித்து நாம் இந்திய தரப்பினருக்கு விளக்கினோம். சில விடயங்களை அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர். சில விடயங்கள் குறித்து அவர்களுக்கு தெரியாமல் இருந்தது. நாம் அவற்றை விளக்கினோம் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக