திங்கள், 15 ஆகஸ்ட், 2011

TNA யில் இணையுமாறு அனைத்து தமிழ்க் கட்சிகளுக்கும் சங்கரி அழைப்பு


ஐனநாயகக் கட்சிகளின் அமைப்பு விதிகளுக்கமைய தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமது மகாநாட்டை நடத்தத் தீர்மானித்துள்ளது.இம்மகாநாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முரண்படாது அதற்கு வலுச்சேர்க்கும் ஒன்றாக அமையும் என்பதில் உறுதியாகவுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணி சற்று நேரத்திற்கு முன்னர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

அரசியல் கட்சி என்ற வகையில் கட்சியின் நடைமுறைகள், செயற்பாடுகளுக்கமையவே வருடா வருடம் மகாநாடு ஒன்றை நடத்தவேண்டியது தவிர்க்க முடியாத நிலைப்பாடும் அமைப்புவிதியுமாகும்.

அதற்கமைய எமது மகாநாடு யாழ்ப்பாண நகரில் எதிர்வரும் 2011-09-11 அன்று நடைபெறவுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி பிரிவினையை வளர்க்காது தொடர்ந்தும் ஒற்றுமையை பேணும் என்பதில் மாற்றம் இல்லை.

தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை பொறுத்தவரையில் தமிழர்விடுதலைக் கூட்டணி தமிழத் தேசிய கூட்டமைப்பில்; அங்கத்துவம் வகிக்கும் சகல கட்சிகளுடனும் மட்டும்தான் தொடர்ந்து இணைந்து செயற்படும். எமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது.

தமிழர் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து தொடர்ந்து நாம் உரிமைக் குரல் கொடுப்போம், உறவுக்கு கைகொடுப்போம் என்ற நிலைப்பாட்டில் நாம் என்றும் உறுதியாக இருப்போம் இதை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் தமிழ் மக்களும் சர்வதேசமும் அறிந்து கொள்ளவும் புரிந்துகொள்ளவும் வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தமிழத் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படும் சகல கட்சிகளுக்கும் மகாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விட உள்ளேன். சகல தமிழ் மக்களையும் மகாநாட்டில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம். இம்மகாநாடு தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் மகாநாடாகவே அமையவேண்டும்.

இந்த நேரத்தில் ஒன்றுபட்டு ஒரு அணியில் செயற்படும் தமிழ்க்கட்சிகளின் தமிழத் தேசிய கூட்டமைப்பில் இதுவரை சேராமல் விலகி நிற்கும் தமிழ்க்கட்சிகளையும் பிரிந்து நிற்காமல் தமிழத் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுக்கின்றேன்.

நடைபெறவுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி மகாநாடு நிச்சயமாக உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் ஒன்றுபட்டு நிற்கும் தமிழர்களின் ஒற்றுமையை வெளிக்காட்டும் மகாநாடாக அமையவேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக