செவ்வாய், 26 ஜூலை, 2011

Jeyalalitha சொத்து குவிப்பு: நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோருகிறார்

பெங்களூர்: வருமானத்தை மீறி சொத்துக் குவித்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா 3 புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்கள் மீது வரும் புதன்கிழமை விசாரணை நடக்கவுள்ளது.

பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா நாளை ஆஜராக வேண்டும். ஆனால், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி நேற்று 3 மனுக்களை தாக்கல் செய்தார்.

ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா,இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை முடிந்துவி்ட்டது.

இதையடுத்து நீதிபதி மல்லிகார்ஜூனய்யா கடந்த 14ம் தேதி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் 27ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆனால், நேற்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார் நீதிபதியிடம் 2 மனுக்கள் அளித்தார்.

முதல் மனுவில், ஜெயலலிதா தற்போது முதல்வர் பொறுப்பில் இருப்பதாலும், அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாலும் நீதிமன்றத்தில் அவர் ஆஜராக இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே, அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இரண்டாவது மனுவில், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 313ல் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் மூலம் வாக்குமூலங்களை எழுத்து மூலமாகப் பெறலாம் என்று கூறப்பட்டிருந்தது.

மூன்றாவது மனுவில், ஜெயலலிதா தரப்பிலிருந்து அளிக்க வேண்டிய விபரங்களை வழக்கறிஞர் மூலம் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய அனுமதிக்காவிட்டால், வீடியோ கான்பரன்சிங் வசதியைக்கொண்டு அவரிடம் விளக்கங்கள் பெற நீதிமன்றம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் ஜெயலலிதாவின் பாதுகாப்பு விபரங்கள் குறித்து சீலிடப்பட்ட கவர் ஒன்றையும் நீதிபதியிடம் அவர் அளித்தார்.

இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தேஷ் செளட்டா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஏற்கக்கூடாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டியது அவசியம். எனவே, இந்த மனுக்களை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்றார். மேலும் தங்கள் தரப்பு எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய அவகாசம் கோரினார்.

இதையடுத்து விசாரணையை வரும் 27ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக