செவ்வாய், 26 ஜூலை, 2011

சமச்சீர் கல்வி. 27ந் தேதி வகுப்புகளை புறக்கணிக்க வேண்டும் திமுக வேண்டுகோள்!

சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி வரும் 27ந் தேதி வகுப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று மாணவர், ஆசிரியர், பெற்றோர்களுக்கு திமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. வன்முறைக்கு சிறிதும் இடமின்றி அறவழியில் போராட்டம் நடத்த திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் மாணவர்களின் நலனில் அக்கறையின்றி தமிழக அரசு செயல்படுவதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் அரசு வக்கீல் பரபரப்பு வாதம்!

‘‘சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களின் தரத்தை உயர்த்தவும், உயர்மட்டக் குழு அமைத்து அதுகுறித்து ஆராய அவகாசம் தேவைப்படுவதாலும் இந்தாண்டு தமிழகத்தில் சமச்சீர் கல்வி கொண்டுவருவதற்கான சாத்தியம் இல்லை’’ என்று சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்த இறுதி விசாரணையின் போது அரசு தரப்பு வக்கீல் வாதிட்டார். கடந்த திமுக ஆட்சியின் போது தமிழகத்தில் சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. முதல்கட்டமாக 1 மற்றும் 6 வகுப்புகளுக்கு கடந்த ஆண்டில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டது. 10ம் வகுப்பு வரை மற்ற வகுப்புகளுக்கு இந்த ஆண்டு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக சட்டதிருத்தமும் நிறைவேற்றப்பட்டது.

இதை எதிர்த்து பெற்றோர் உள்பட சமச்சீர்கல்வி ஆதரவாளர்கள் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஐகோர்ட் விசாரித்து சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து கடந்த மாதம் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அப்பீல் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஒரு கமிட்டி அமைத்து சமச்சீர் கல்வியை ஆய்வு செய்து அந்த அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதை தொடர்ந்து 9 பேர் கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. அந்த கமிட்டி சமச்சீர் பாடபுத்தகங்களை ஆய்வு செய்து ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையை ஐகோர்ட் ஆய்வு செய்து அது ஏற்புடையதல்ல என தீர்ப்பளித்தது. மேலும் இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல் படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஜூலை 22க்குள் பள்ளிகளுக்கு சமச்சீர் பாடப் புத்தகங்களை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டது.  ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மீண்டும் அப்பீல் செய்தது. ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.

இந்த மனுவை கடந்த 21ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சவுகான், பாஞ்சால், தீபக் வர்மா ஆகியோர் விசாரித்து, ‘‘இந்த வழக்கில் எந்த தடையும் விதிக்க முடியாது. ஜூலை 26ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும்’’ என உத்தரவிட்டனர். இந்நிலையில் தமிழக அரசின் அப்பீல் மனுவுக்கு பெற்றோர் தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும். கடந்த 2 மாதங்களாக மாணவ, மாணவிகள் எந்த புத்தகத்தையும் படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக 10ம் வகுப்பு மாணவர்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே உடனே சமச்சீர் புத்தகத்தை வழங்க உத்தரவிட வேண்டும். தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். சென்னை ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்யக்கூடாது’’ என்று கூறியுள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் சமச்சீர் கல்வி வழக்கின் இறுதி விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சவுகான் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பாக வக்கீல் பி.பி.ராவ் ஆஜராகி, ‘‘சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை. தேசிய அளவிலான தரத்துடன் சமச்சீர் கல்வியை மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. உயர்மட்டக் குழு அமைத்து இதுகுறித்து ஆராய வேண்டியுள்ளது. இதற்கு போதிய கால அவகாசம் தேவை. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள சமச்சீர் பாடபுத்தகங்கள் தரமானதாக இல்லை’’ என்று வாதிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக