செவ்வாய், 26 ஜூலை, 2011

நாளை விசாரணை ஜெயலலிதா ஆஜர் ஆவாரா?சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்.

பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடக்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா நாளை ஆஜராக வேண்டும். ஆனால், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க  நேற்று மனுதாக்கல் செய்துள்ளதால் ஆஜராவாரா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது. குற்றவியல் சட்டப்பிரிவு 313ன்படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் நிலையில் வழக்கு உள்ளது.

எனவே, நீதிபதி மல்லிகார்ஜூனய்யா கடந்த 14ம் தேதி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்குபேரும் நாளை 27ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். ஜெயலலிதா தரப்பில் கேட்கப்படவேண்டிய விபரங்கள் குறித்து இருதரப்பு வழக்கறிஞர்களும் நேற்று ஆலோசனை நடத்துவதற்காக தனி நீதிமன்றம் வந்தனர். அப்போது ஜெயலலிதாவின் வக்கீல் குமார் நீதிபதியிடம் 2 மனுக்கள் அளித்தார்.

முதல் மனுவில், ஜெயலலிதா தற்போது முதல்வர் பொறுப்பில் இருப்பதாலும், அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருவதாலும் நீதிமன்றத்தில் அவர் ஆஜராக இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே, அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இரண்டாவது மனுவில், ஜெயலலிதா தரப்பிலிருந்து அளிக்கவேண்டிய விபரங்களை அவர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் அல்லது விடியோ கான்பரன்சிங் வசதியைக்கொண்டு அவரிடம் விளக்கங்கள் பெற நீதிமன்றம் ஏற்பாடு செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் பாதுகாப்பு விபரங்கள் குறித்து சீலிடப்பட்ட கவர் ஒன்றையும் வழக்கறிஞர் அளித்தார்.

இதுகுறித்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தேஷ் சவ்ட்டா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தங்கள் தரப்பு எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய அவகாசம் கோரினார். இம்மனுமீது அரசு தரப்பு எதிர்ப்பை 27 ம் தேதி  எழுத்துப்பூர்வமாக அளிக்கவேண்டும் என்று கூறி விசாரணையை அன்றைய தினத்துக்கு நீதிபதி மல்லிகார்ஜூனய்யா ஒத்திவைத்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர்  27ம்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று ஏற்கனவே நீதிபதி பிறப்பித்த உத்தரவு குறித்து நீதிபதி கருத்து ஏதும் தெரிவிக்காத நிலையில் ஜெயலலிதா ஆஜராவாரா என்ற கேள்வி வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, சொத்துக்குவிப்பு வழக்கு தொய்வின்றி தொடர்ந்து நடக்கக்கோரி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனு நீதிபதி வேணுகோபால கவுடா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. முன்தினம், அரசு வழக்கறிஞரும் நானும் ஒரே மேடையில் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். எனவே, இன்று இம்மனுவை நான் விசாரிப்பது சரியல்ல. விசாரணை நீதிபதி குறித்து தலைமை நீதிபதி முடிவுசெய்வார் எனக்கோரி மனுவை தலைமை நீதிபதி கேஹருக்கு நீதிபதி வேணுகோபால கவுடா பரிந்துரை செய்தார். சுதாகரன் தரப்பில் 10 சாட்சிகளிடம் மறுவிசாரணை கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவும் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக