திங்கள், 20 ஜூன், 2011

ஜெயா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்!!

ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதும், அவரை ஆதரிக்கும் ஊடகங்களும் பிழைப்புவாதிகளும் முதலாளிகளும் வழக்கம்போலத் துதிபாடக் கிளம்பிவிட்டார்கள். ஆட்சி மாறும்போது இப்படியெல்லாம் நடப்பது வாடிக்கையானதுதான் என்றாலும், இப்போது பழைய பிசாசை புதிய அம்மனாகச் சித்தரிக்கும் கோயபல்சு வேலையை அவர்கள் திட்டமிட்டுச் சேது வருகிறார்கள். “ஜெயலலிதா இப்போது மாறிவிட்டார், அவரது ஆட்சி வித்தியாசமான ஆட்சியாக இருக்கும்” என்ற பிரமை தேர்தலுக்கு முன்பே ஊடகங்களால் திட்டமிட்டு ஊட்டப்பட்டன. தமிழக மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குப் போராட்டமோ, மாற்றுத் திட்டமோ முன்வைக்காத போதிலும், ஜெயாவைத் துதிபாடி மக்களின் கவனத்தை அதை நோக்கிக் குவிப்பது என்று பார்ப்பன ஊடகங்கள் செயல்பட்டன
தி.மு.க.வின் இலஞ்ச-ஊழலை அம்பலப்படுத்துவதில் மட்டும் அக்கறை காட்டும் ஊடகங்கள், ஜெயா ஆட்சியில் நடந்த இலஞ்ச-ஊழல், கொள்ளைகளைப் பற்றி வாய்திறப்பதில்லை. ஜெயா மீது சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் சோத்து சேர்த்த வழக்குகளும் உள்ளன. இந்த வழக்குகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கின்றன. ராசாவும் தயாநிதியும் சி.பி.ஐ. விசாரணை, வழக்கு காரணமாக பதவியில் இருக்கக்கூடாது என்கிற போது, ஜெயலலிதாவுக்கு மட்டும் அது பொருந்தாதா? இருப்பினும், ஜெயலலிதா கும்பலின் முந்தைய மகாத்மியங்கள் அனைத்தும் ஊடகங்களால் மூடிமறைக்கப்படுகின்றன.
அவரது முகத்தில் எப்போதுமில்லாத புன்னகை – மென்மையான தாய்மையுணர்வுமிக்க தோற்றத்தைக் கொடுக்கிறது. கருணைமிக்க அம்மாவாகக் காட்சியளிக்கிறார். மக்கள் அளித்துள்ள தீர்ப்பு அர்த்தமுள்ளது என்பதை முதல்நாள் தொட்டே நிரூபிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரின் முந்தைய ஆட்சிக் காலங்களில் ஆதிக்கம் செலுத்திய சர்வாதிகாரத்திற்குப் பதில், வெளிப்படைத்தன்மையும் பதில் கூறும் பொறுப்புணர்வும் இந்த முறை பிரதிபலிக்கிறது” என்று ஜால்ரா போடுகிறது, இந்தியா டுடே. “இது மக்கள் புரட்சி. மக்கள் ஒரு மவுனப் புரட்சியை நடத்தியிருக்கிறார்கள்” என்று ஜெயா துதிபாடுகிறது, குமுதம் ரிப்போர்ட்டர்.
ஜெயலலிதாவின் ஆட்சி எப்படிப்பட்டதாக இருக்கும் என்று முடிவு செய்வதற்கு ஊகமோ, காத்திருப்போ அவசியமில்லை. தி.மு.க. வின் ஊழலால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு குறித்துப் பெருங்கூச்சல் போட்டே ஆட்சியைப் பிடித்து விட்ட ஜெயா செய்த முதற் காரியம், 1200 கோடி ரூபாய் விரயமாக்கும் வகையில் புதிய தலைமைச் செயலகத்தை இழுத்து மூடிவிட்டு, தானே தகுதியற்றதென்று நிராகரித்து, புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டுவதற்கு பழமை வாய்ந்த கல்லூரியை இடிக்க எத்தணித்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் வேறெரு இடத்தில் பூமி பூசையும் போட்ட ஜெயா, இப்போது ஜார்ஜ் கோட்டைக்குள் புகுந்துவிட்டார். ஏற்கெனவே அச்சிடப்பட்ட 200 கோடி ரூபாய் பாடப் புத்தகங்களை வீணாக்கி, மேலும் 100 கோடி செலவில் பழைய பாடப் புத்தகங்களை அச்சிட்டு ‘சமச்சீர் கல்வி’யை ஒழிக்கும் நோக்கில் உத்தரவு போட்டுள்ளார். இவற்றையெல்லாம் தனது கோயபல்சு பாணியில் நியாயப்படுத்த வாதம் புரிகிறார். இவையெல்லாம் பார்ப்பன-பாசிச ஜெயா மாறிவிட்டதையா காட்டுகின்றன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக