ஞாயிறு, 29 மே, 2011

மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம்

சென்னை: என் மகன் விஜய ஸ்ரீஹரியை மீட்கும் வரை நான் ஓயமாட்டேன். இன்று முதல் நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.

நடிகை வனிதாவுக்கும், அவரது மூத்த கணவர் ஆகாஷுக்கும் தங்கள் மகன் விஜயஸ்ரீஹரி குறித்து பல மாதங்களாக தகராறு நடந்து கொண்டிருக்கிறது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை மாலை வரை விஜயஸ்ரீஹரி ஆகாஷுடனும், வார இறுதி நாட்களில் தாய் வனிதாவுடனும் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து சில மாதங்களாக வனிதா சத்தம் இல்லாமல் இருந்தார். தற்போது மீண்டும் மகனுக்காக போராட வந்துவிட்டார்.

இது குறித்து அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து நிருபர்களிடம் கூறியதாவது,

எனது மகன் விஜயஸ்ரீஹரியை மீட்டுத் தருமாறு கமிஷனர் திரிபாதியிடம் கடந்த வாரம் புகார் கொடுத்தேன். அவரும் இணை கமிஷனரை விசாரிக்க உத்தரவிட்டார். எனினும் விசாரணை ஒழுங்காக நடக்கவில்லை.

சட்டப்படி, நியாயப்படி எனது மகன் என்னுடன் தான் இருக்க வேண்டும். இதற்காகத் தான் நான் கடந்த 7 மாத காலமாக போராடிக் கொண்டிருக்கிறேன். தற்போதைய அரசு என்னுடைய பிரச்சனைக்கு தீர்வு காண உதவும் என்று நம்புகிறேன்.

எனது மகனை அழைத்துவருவதற்காக நேற்றிரவு நான் ஆகாஷ் வீட்டிற்குச் சென்றேன். ஆனால் நான் குடித்துவிட்டு தகராறு செய்ததாக சில போலீசார் கமிஷனரிடம் தெரிவித்துள்ளனர். மகனுக்காக ஏங்கும் என்மீது இப்படியெல்லாமா பழி சுமத்துவது.

நான் கமிஷரிடம் நடந்த எல்லாவற்றையும் தெரிவித்துவிட்டேன். அவரும் எனது மகனை மீட்டுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.

விஜயஸ்ரீஹரியை அழைத்து வருவதற்காக கடந்த மாதம் விருகம்பாக்கம் சென்றேன். அப்போது ஆகாஷ் என்னை நடுத்தெருவில் வைத்து அடித்தார். இது குறித்து நான் விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தும் அவர்கள் வழக்கும் பதிவு செய்யவில்லை, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பற்றியும் கமிஷனரிடம் கூறினேன்.

எனது மகனை மீட்கும் வரை ஓயமாட்டேன். அதுவரை நான் தண்ணீர் கூட குடிக்க மாட்டேன். இன்று முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக