திங்கள், 29 நவம்பர், 2010

கருணாநிதியுடன் பாமக தலைவர் ஜி.கே.மணி திடீர் சந்திப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தமிழக முதல்வர் கருணாநிதியை இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.

புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை இச் சந்தித்து நடந்தது.

மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய மணி,
தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமைகள் மற்றும் சலுகைகளை கிடைக்கச் செய்ய ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகும். இதை காலம் தாழ்த்தாமல் எடுக்க மத்திய அரசை முதல்வர் கருணாநிதி வலியுறுத்த வேண்டும். ஒருவேளை மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காலம் தாழ்த்தினால் தமிழக அரசே விரைவாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தேன்.

இதுதவிர உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. குறிப்பாக வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு நீதிபதி மட்டும் உள்ளார். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்றும் முதல்வரிடம் வலியுறுத்தினேன்.

பாமகவின் இந்தக் கோரிக்கைகளை முதல்வர் கனிவுடன் கேட்டுக்கொண்டார். அவருடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது என்றார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இடம் பெறுமா என்று கேட்டதற்கு, இன்றைய சந்திப்பின்போது கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. கூட்டணி குறித்து பேசுவதற்குரிய காலம் இன்னும் கனியவில்லை என்றார்.

இருப்பினும் கூட்டணி விஷயமாகவும் இருவரும் பேசியதாகவும் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக