திங்கள், 1 நவம்பர், 2010

குழந்தைகள் கடத்தலைத் தடுக்க பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள்-

Commissioner Rajendiranசென்னை: பள்ளிகளிலிருந்து குழந்தைகளைக் கடத்துவதைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்காணிக்க 28 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பூக்கடை பகுதியில் மட்டும் இவை பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை ஆணையர் ராஜேந்திரன் இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

பூக்கடையில் பத்திரியன் தெரு, பந்தர்தெரு, மலைய பெருமாள் தெரு, ஆண்டர்சன் தெரு, அமரசன் தெரு, பிராட்வே பஸ்நிலையம் உள்ளிட்ட 28 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து உள்ளோம்.

இவை தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும் தொடர்ந்து இயங்கும். 24 மணி நேரமும் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

தீபாவளி பண்டிகை நேரத்தில் வெளியூர் செல்லும் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளன. இதை தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகளுடன் சேர்ந்து போலீசார் கண்காணிப்பார்கள்.

கோயம்பேடு பஸ்நிலையத்தில் போலீசார் மாறு வேடத்தில் நின்று ஆய்வு செய்வார்கள். அதிக கட்டணம் வசூலிப்பவர்களும், புரோக்கர்களும் கைது செய்யப்படுவார்கள்.

அதிக கட்டணம் கேட்டால் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

தீபாவளி பண்டிகையையொட்டி கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து 4 ஆயிரம் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே பஸ்நிலையத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தியாகராயநகரில் நேற்று மட்டும் 10 லட்சம் பேர் கடைகளுக்கு வந்து பொருட்கள் வாங்கி சென்றுள்ளனர். அங்கும் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கோவையில் 2 குழந்தைகள் கடத்தி கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அனைத்து பள்ளிகளின் வாசல்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டு இருக்கிறோம். ஆனால் பல பள்ளிகளில் இன்னும் கண்காணிப்பு கேமரா பொருத்தவில்லை. எனவே கட்டாயம் கேமரா பொருத்த வேண்டும்.

இதுசம்பந்தமாக தீபாவளி முடிந்ததும் அனைத்து பள்ளிகள் மற்றும் பெற்றோர் சங்கங்களை அழைத்து பேச இருக்கிறோம். அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்பும் ஆட்டோ, வேன் டிரைவர்கள் பற்றிய முழு விவரங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். வேலையில் இருந்து நிறுத்தப்பட்ட டிரைவர்கள் விவரங்களும் தெரிந்து இருக்க வேண்டும். குழந்தைகளிடமும் எல்லா விவரங்களையும் சொல்லி கொடுக்க வேண்டும் என்றார் ராஜேந்திரன்.
பதிவு செய்தவர்: முட்டாள் போலீசு
பதிவு செய்தது: 01 Nov 2010 5:44 pm
கேமராவை பொருத்தி குற்றவாளியை கண்டுபிடிப்பவன் முட்டாள் போலீசு, சாமர்த்தியமே இல்லாதவன். கண்காணிக்கிறேன் என்று சொல்லி எல்லா போலீசும் பூக்கடைக்கு வரும் பூவையரை சைட்டு அடிக்கத்தான் இந்த ஏற்பாடு இங்கிலாந்து நாட்டில் இது ஏராளம், அவனின் அடிமை என்பத்தை இந்த போலீசு காரர் எடுத்துக்காட்டுகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக