ஞாயிறு, 3 அக்டோபர், 2010

சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமாகிறது.அவரது வேடத்தில வித்யா பாலன்

சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமாகிறது. அவரது வேடத்தில் நடிக்கும் வித்யா பாலன், சில்க் போல இடுப்பை வளைத்து நெளித்து ‘கிக்’காக டான்ஸ் ஆட ஒரு மாதம் பயிற்சி எடுக்கிறார். தனது காந்தக் கண் கவர்ச்சியால் இளவட்டங்களை கவர்ந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. 1980களில் அவர் இல்லாத தமிழ் படங்களே இல்லை என்ற அளவுக்கு பெரும்பாலான படங்களில் நடித்தார். கமல், ரஜினி உள்ளிட்ட எல்லா ஹீரோக்களுடனும் ஸ்மிதா நடித்திருக்கிறார். ரசிகர்களை மகிழ்வித்த சில்க் ஸ்மிதாவின் நிஜ வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருந்தது. பட அதிபர்கள், நடிகர்கள், கால்ஷீட் மேனேஜர்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். திடீரென்று ஒருநாள் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் அவரது வாழ்க்கை கதையை படமாக்குகிறார் இந்தி பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர். இதற்கு ‘டர்ட்டி பிக்சர்’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க பல்வேறு நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் வித்யா பாலன் பொருத்தமாக இருப்பார் என்று முடிவானது. ஸ்மிதாவின் கண், உதடு, இடுப்பை வளைத்து ஆடும் நடன அசைவு பேசப்பட்டதால் அவரைப்போலவே ஆடுவதற்காக ஒரு மாதம் தென்னிந்திய நடன இயக்குனரிடம் பயிற்சி பெறுகிறார் வித்யா. ‘இது கவர்ச்சி படம் என்ற நோக்கத்தில் அல்லாமல் ஒரு நடிகைக்கும், தயாரிப்பாளருக்கும் இருந்த உறவை சித்தரிக்கும் படமாகவே இருக்கும். நடிப்பு திறமை வாய்ந்த வித்யாபாலன், சில்க் வேடம் ஏற்பது பொருத்தம். டைரக்டர் மிலன் ருத்தாரியாவும், நானும் சில்க் ஸ்மிதா வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளோம். நடன அம்சமே படத்தில் பிரதானம். இதில் நடிக்கும் ஹீரோவை முடிவு செய்தபிறகே வித்யாபாலன் நடன பயிற்சி மேற்கொள்வார்’ என்றார் தயாரிப்பாளர் ஏக்தா கபூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக