திங்கள், 25 அக்டோபர், 2010

கட்சி மாறிய எம்பி மலையகத்திலே ஜனநாயக மக்கள் காங்கிரஸ் என்ற புதிய தொழிற்சங்கத்தை உருவாக்கியுள்ளார்

தலவாக்கலையில் நடப்பது என்ன? மனோ கணேசன்
பாரதிதாசன் கைது ஒரு அரசியல் பழிவாங்கள் நடவடிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த பொதுத் தேர்தலிலே ஐக்கிய தேசிய முன்னணியில் எமது கட்சியின் வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட லெ.பாரதிதாசன் நேற்று தலவாக்கலையில் கைது செய்யப்பட்டுள்ளதானது ஒரு முற்று முழுதான அரசியல் பழிவாங்கள் நடவடிக்கை.

எமது கட்சியில் இருந்து தன்னிச்சையாக பிரிந்து அரசுடன் இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினரை பின்பற்றி எமது கட்சியும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவில்லை. மாறாக எமது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியவருக்கு எதிராக நாம் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம்.

இந்நிலையில் கட்சி மாறிய எம்பி மலையகத்திலே ஜனநாயக மக்கள் காங்கிரஸ் என்ற புதிய தொழிற்சங்கத்தை உருவாக்கியுள்ளார். இந்த தொழிற்சங்கத்தின் செயற்பாட்டிற்கு நுவரெலியா மாவட்டத்தில் பாரதிதாசன் பாரிய தடையாக இருப்பார் என்ற காரணத்தினாலேயே பாரதிதாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வருட பெப்ரவரி மாதம் எமது கட்சியில் இணைந்து கொண்ட பாரதிதாசன் அதற்று முன் மறைந்த அமைச்சர் சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணியில் நீண்ட கால உறுப்பினராகவும், அதற்கு முன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினராகவும் மலையக தொழிற்சங்க அரசியலில் பணியாற்றியுள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற மத்திய மாகாணசபை தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் சார்பாக ஆளும் ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக வெற்றிலை சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் பாரதிதாசன் போட்டியிட்டும் உள்ளார். இந்நிலையில் கடந்த 2001ம் வருட கால கட்டத்தில் பாரதிதாசன் கிளிநொச்சிக்கு சென்று வந்துள்ளார் என்று கூறி இன்று அவர் திடீர் கைது செய்யப்படுவது திட்டவட்டமான அரசியல் பழிவாங்கள் நடவடிக்கை என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

எமது கட்சியில் இருந்து பிரிந்து சென்று அரசாங்கத்தில் இணைந்துகொண்டு புதிய ஒரு தொழிற்சங்கத்தை மலையகத்திலே ஆரம்பித்துள்ள குழுவினர்தான் அரசாங்கத்துடன் சேர்ந்துகொண்டு இத்தகைய பழிவாங்கள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். எமது கட்சி சட்டத்தை மதிக்கும் ஒரு ஜனநாயக கட்சியாகும். கடந்த காலங்களிலே தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நாம் குரல் கொடுத்துவந்தபோது, எனக்கு எதிராக பல்வேறு பயங்கரவாத குற்றச்சாட்டுகளை இனவாத சக்திகள் எழுப்பின.

அவை அனைத்தையும் நாங்கள் வெற்றிகரமாக சாமளித்துள்ளதை போல இந்த சதி முயற்சிகளையும் நாங்கள் முறியடிப்போம். எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் மலையக மக்கள் முன்னணியின் நுவரெலியா மாவட்ட முன்னாள் அரசியல் அமைப்பாளருமான லெட்சுமணன் பாரதிதாசன் உட்பட மூன்று சந்தேக நபர்களை மத்திய மாகாண புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய மாகாண புலனாய்வு பிரிவினர் தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கடந்த 22ஆம் திகதி மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி முக்கியஸ்தராக செயற்பட்டு வந்த தாளமுத்து சுதாகர் என்ற இளைஞர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் பின்பு தலவாக்கலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையில் நேற்று ஜனநாயத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் லெட்சுமணன் பாரதிதாசனும் மத்திய மாகாண புலனாய்வுப்பிரிவினால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக