திங்கள், 18 அக்டோபர், 2010

தனுஷ்கோடியின் நினைவுச் சின்னங்களில் அபூர்வ கற்கள் பெயர்த்தெடுப்பு- பாதுகாக்கப்படுமா?


ராமேசுவரத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தனுஷ்கோடி கடல்பகுதி. 1964-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தனுஷ்கோடி பகுதி ராமேசுவரத்திற்கு அடுத்த படியாக சிறப்பு வாய்ந்த பகுதியாகும்.
ஆனால் 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு வீசிய கடும் புயலாலும், மழையாலும், கடல் கொந்தளிப்பாலும் தனுஷ்கோடி அழிந்து போனது. அங்கு இருந்த துறைமுகப் பகுதி மருத்துவ மனை கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், தபால்நிலையம், ரெயில் நிலையம், இந்து கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் என அனைத்து கட்டிடங்களும் அழிந்தன.
அவை கடந்த 46 வருடமாக கடற்கரை மணலில் புதைந்த நிலையில் காட்சியளித்து வருகின்றன. தனுஷ்கோடியில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் அபூர்வ பவளப்பாறை கற்களாலும், முரக்கல் என்று சொல்லக்கூடிய கற்களாலும் கட்டப்பட்டவை.
புயலால் அழிந்து போனாலும் இன்று வரையிலும் ஒரு சில கட்டிடங்கள் லேசான சேதத்துடன், வரலாற்றுச் சின்னத்திற்கு எடுத்துக்காட்டாக காட்சியளிக்கின்றன. இவற்றை இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து விட்டுச் செல்கின்றனர்.

புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடற்கரையில் பொது மக்கள், மீனவர்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரை பகுதியில் உள்ள புயலால் அழிந்து போன கட்டிடங்களில் உள்ள பவளப்பாறை கற்களையும், தண்ணீரில் மிதக்கும் தன்மையுள்ள முரக்கற்களையும் அப்பகுதியை சேர்ந்த ஒரு சிலர், இரவு நேரங்களில் பெயர்த்தெடுத்து சுற்றுலா பயணிகளிடம் அதிகமான விலைக்கு விற்று வருகின்றனர்.

முரக்கற்கள் தண்ணீரிலும் மிதக்கும் தன்மை கொண்டதால் சுற்றுலா பயணிகளும் அந்த கற்களை அதிக ஆர்வத்துடன் பணம் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.

புயலால் அழிந்து போனாலும், வரலாற்று நினைவுச் சின்னங்களாக காட்சியளிக்கும் இந்த கட்டிடங்களில் இருந்து பவளப்பாறை கற்களையும், முரக்கற்களையும் பெயர்த்துக் கொண்டே போனால் அவை அடியோடு அழிந்து விடும். எனவே, அந்த கட்டிடங்களை பாதுகாப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக