ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

பியசேன: ஏழ்மை வறுமை. தமிழரசுக் கட்சி வழமைபோல் அவற்றை ஏறெடுத்தும் பார்க்கவில்லை

மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தமிழரசு கட்சி சரிப்பட்டு வராது

இது என் தனிப்பட்ட முடிவல்ல. நான் பாராளுமன்றம் சென்றது முதல் இன்றுவரை ஆயிரக் கணக்கான அம்பாறை மாவட்டத் தமிழர்கள் விடுத்த வேண்டுகோளையடுத்து நான் கட்சி மாறினேன்’ என்கிறார் பியசேன. கட்சி மாறியமை தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ‘கடந்த 30 வருடகால போர் மற்றும் சுனாமி மற்றும் இன முரண்பாடு போன்றவற்றால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பத்தில் உள்ளனர். நான் எம்.பியாகிய பின்பு சந்திக்க வருவோர் அனைவரும் தமக்கு தொழில் தாருங்கள் என்பதைவிட அடுத்தவேளைச் சோற்றுக்கு வழிகாட்டுங்கள் என்று கேட்டு வருகிறார்கள்.

விதவைகள் தமது குமர்களுடன் வேலைக் கேட்டு வருகிறார்கள். காலையில் பார்த்தால் 1500 தமிழ்ப் பெண்கள் புல்லுப் பிடுங்கப் போகிறார்கள். எங்கு பார்த்தாலும் ஏழ்மை வறுமை. முறையற்ற ஆசிரியர் இடமாற்றம், வளச்சுரண்டல், ஆலையடி வேம்பு பிரதேச சபையின் சீரற்ற நிருவாகம், பிள்ளைகள் கடத்தல் என இன்னோரன்ன பிரச்சினைகள் தொடருகின்றன.
இவற்றையெல்லாம் பல தடவைகள் எமது தமிழரசுக் கட்சித் தலைமைகளிடம் எடுத்துச் சொன்னேன். அவர்கள் வழமைபோல் அவற்றை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஏலவேயிருந்த கூட்டணி எம்.பிக்கள் போல் நானும் போலியாக நடித்து விட்டு பத்திரிகைகளுக்கு அறிக்கைவிட்டுவிட்டு வாளாவிருக்க நான் தயாரில்லை.
நான் சிறு வயது முதல் சேவை செய்து பழக்கப்பட்டவன். மாணவர்களுக்கு பென்சில், றேசர் வழங்குவது முதல் மரணவீடுகளுக்குச் சென்று உணவளித்து வருவதுவரை மக்களுடனேயே இருந்து வந்திருக்கிறேன். எனவே சேவையைப் பற்றி என்னிடம் எவரும் சொல்லத் தேவையில்லை. எனவே எனது மாணவச் செல்வங்களையோ, தாய்மாரையோ அன்பு மக்களையோ நான் ஏமாற்றத் தயாரில்லை.
அவர்களுக்கு என்னால் முடிந்தளவு சேவைசெய்ய ஆசைப்படுகிறேன். தேர்தல் பிரசார காலத்திலும் நான் கூறியதெல்லாம் சேவைசெய்ய விரும்புகிறேன். அதுவும் பூதம்போல் சேவை செய்ய விரும்புகிறேன். அதற்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள் என்பதைத் தான். இந்தப் பிரசாரத்தையும் நான் தனியாக ஒட்டோவிலேதான் செய்தேன். எவரும் எனக்காக மேடைபோடவில்லை.
கே: கட்சிக்காக மக்கள் என்யர்கள். நடந்தது என்ன?
ப: என்னுடன் முன்னாள் எம்.பிக்கள் இருவர் போட்டியிட்டார்கள். கட்சிக்காக வாக்கு அளிக்கப்பட்டிருப்பின் அவர்களுக்கு அது வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எனக்கு மக்கள் வழங்கிய வாக்குகள் எனது சேவைக்காக வழங்கிய வாக்குகளே தவிர கட்சிக்காக அல்ல. எனவேதான் கட்சிக்காக மக்கள் அல்ல மக்களுக்காகத்தான் கட்சி என்று கூறுகிறேன். தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் கட்சிக்காகவே மக்கள் என்ற நிலை. அவர்களில் ஓரிருவர் எடுக்கும் முடிவை ஏனையோரிடம் திணிப்பார்கள். கேட்டால் ‘குரல் கொடுப்பதே எமது பணி தவிர சேவை செய்வது அல்ல’ என்று கடுத்த குரலில் கூறுவார்கள். நான் தெரியாமல் தான் கேட்கிறேன், இவர்கள் இதுவரை குரல் கொடுத்து கண்ட பலன் தான் என்ன?
பிரபாகரனைக் காப்பாற்ற முடிந்ததா? அவரை நம்பியிருந்த வன்னி மக்களைக் காப்பாற்ற முடிந்ததா? அல்லது இவர்களை நம்பியிருந்த வட- கிழக்கு மக்களைக் காப்பாற்ற முடிந்ததா? ஏதுமறியாத அப்பாவித் தமிழ் மக்கள் இன்று அகதி முகாம்களில் திக்குமுக்காடுகின்றனர். அவர்களையாவது மீளக்குடியேற்ற முடிந்ததா?
அறிஞர் அண்ணா தமிழ் நாட்டு மக்களின் நன்மை கருதி திராவிடக் கொள்கையை விட்டுக்கொடுத்து மத்திய அரசுடன் இணைந்து அளப்பரிய சேவையாற்றவில்லையா? அமரர் எம்.சி. கனகரெட்ணம், அமரர் செ.இராசதுரை தமிழ் மக்கள் நலன் கருதி கட்சி மாறி சேவை செய்யவில்லையா? அவர்களை தமிழ் மக்கள் இன்றும் நினைவு கூரவில்லையா?
காலம் மாறுகிறது. கொள்கைகள் மாறுகின்றன நாமும் மாறவேண்டும். இன்றேல் கால ஓட்டத்தில் அள்ளுண்டு போகவேண்டிவரும். இதனால் தான் மாறினேன். அக்கட்சியிலிருந்து எதுவுமே செய்ய முடியாது. அவர்களில் பலர் இலங்கையில் இருப்பதை விட வெளிநாட்டிலிருந்ததே அதிகம். எனவே, இன்னமும் அந்த மாயையில் சிக்குண்டு மக்களின் எதிர்காலத்தைச் சீரழிக்க விரும்பவில்லை. எமது மக்கள் சுதந்திரத்தை ஏனைய மக்களுடன் கெளரவமாக அனுபவிக்கச் செய்யும் அதே சமயம் துரித அபிவிருத்தியையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதுவே எனது கனவு. இன்றைய இந்த முடிவு என்னுடைய தனிப்பட்ட முடிவில்லை. நான் எம்.பி. யாகியது முதல் இன்று வரை ஆயிரக்கணக்கான அம்பாறை மாவட்ட தமிழர்கள் விடுத்த வேண்டுகோள்களின் முடிவு. அவர்களின் ஆணையை நிறைவு செய்துள்ளேன். மக்களை இன்னமும் ஏமாற்ற முடியாது. மக்களுக்கு துரோகம் செய்ய முடியாது. கல்முனையில் ஒரு கூட்டத்தைக் கூட்டி என்னை நையாண்டி செய்தார்கள். வாய் கிழிக்கக் கத்தினார்கள். அவமானப்படுத்தினார்கள்.
மக்களின் பலவீனங்களை வீரவசனங்களால் ஆட்கொண்டு பூச்சாண்டி காட்டும் அரசியல் துரோகம் இன்னும் இம்மண்ணில் நீடிக்கக்கூடாது. அம்பாறையில் இம்முறை மாற்றுக் கட்சிகளுக்கு தமிழர்கள் சுமார் 15 ஆயிரம் வாக்குகளை வழங்கியிருப்பதை கவனிக்க வேண்டும்.
கே: தமிழரசுக் கட்சியில் சிங்கள உறுப்பினர் என்ற ஒரு தனித்துவ அடையாளம் இருந்ததே, அதை இழந்து விட்டீர்களா?
பதில்: கட்சிக்குள் எனக்கு எந்தத் தனித்துவமும் இருக்கவில்லை. வெளிநாட்டிலோ, உள்நாட்டிலோ முக்கிய கூட்டங்கள் நடப்பின் எனக்குக் கூறுவதுமில்லை. அழைப்பதுமில்லை. கல்முனையில் கூட்டம் போட்டு அவமானப் படுத்தினார்கள். ஆலையடிவேம்பு பிரதேச சபை செயல் இழந்துபோவது தொடக்கம் பல பிரச்சினைகளை தலைமையிடம் கூறினேன். அவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதுதான் தனித்துவம்.
கே: கட்சி மாறியதால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளதே!
பதில்: ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளித்தமைக்காக எனக்கு 100 வருட சிறை தண்டனையோ, மரணதண்டனையோ அளித்தால் சந்தோஷப்படுவேன். இதுவரை தமிழரசுக் கட்சியிலிருந்து தமிழர்களை ஏமாற்றியதற்காக மனவேதனையடைகிறேன். எத்தகைய நடவடிக்கையும் எதிர்கொள்ளத் தயார்.
கேள்வி: எதற்காக தமிழரசுக் கட்சியில் வேட்பாளராக நின்யர்கள்?
பதில்: அக்கட்சியில் வேற்பாளராக நிற்க யாரும் முன்வரவில்லை. குத்துவெட்டு அதிகம். இந்நிலையில் நானும் கிருஷ்ணபிள்ளையும் போட்டியிட முன்வந்தோம். எனது கடையை எரித்தார்கள். இன்னும் 5 சதம் நஷ்டஈடு இல்லை. நான் எக்கட்சியில் கேட்டிருந்தாலும் தெரிவாகியிருப்பேன். தமிழசுரக் கட்சியின் உண்மை முகம் தெரியாமல் புலம்பெயர் தமிழர்கள் ஆதரவு வழங்கி வருகிறார்கள். கட்சியை விட்டு ஒதுங்கிய பத்மினி, சிவாஜிலிங்கம் போன்றோர் சொன்ன கதைகள் ஏராளம். கடவுளின் ஆசியுடன் எனக்கு எம்.பி. அந்தஸ்து கிடைத்தது. எனது சேவைக்கு கிடைத்ததே அப்பதவி தவிர கட்சியால் அல்ல.
அம்பாறை மாவட்டத்திலுள்ள 58 தமிழ்க் கிராமங்களில் எத்தனை கிராமங்களில் இத் தமிழ் அரசியல்வாதிகளின் கால்பட்டிருக்கும்? இவர்கள் அங்கு சென்றிருப்பார்களா? இதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
என்னைப் பொருத்தவரை நான் எனது மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அதற்கு இக்கட்சி சரிப்பட்டுவராது. எனவே தான் கட்சி மாறுகிறேன் சரியான முடிவையே நான் எடுத்திருக்கிறேன் இதில் எந்தப் பிழையுமில்லை; துரோகமுமில்லை. மக்களின் ஆணைப்படியே கட்சி மாறுகிறேன். என்னால் முடிந்த உயரிய சேவைகளையும் அபிவிருத்தி நடவடிக்கையையும் ஜனாதிபதியூடாக பெற்று மக்களுக்கு பெற்றுக் கொடுப்பேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக