வெள்ளி, 28 நவம்பர், 2025

வெள்ளக் காடாக மாறிய இலங்கை - இதுவரை 70 க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு பதுளையில் மட்டும் 31 பேர் உயிரிழப்பு

 bbc.com : திட்வா புயல்: வெள்ளக் காடாக மாறிய இலங்கை
இலங்கையில் இயற்கை சீற்றத்தால் 40 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மழையால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்குள்ள நிலவரம், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் நிலை ஆகியவற்றைக் காட்டும் சில புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.
கொழும்பு - பதுளை பிரதான சாலையில் உள்ள ஒய் சந்திப்பில் இருந்து பண்டாரவெல செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது. அந்த சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் தியத்தலாவ வழியாகச் செல்லும் சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



காடியன்லெனா நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது
படக்குறிப்பு, மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது

நாவலப்பிட்டி - தலவாக்கலை வீதியில் உள்ள காடியன்லெனா நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.
காடியன்லேன அருவிக்கு அருகில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, நாவலப்பிட்டி - தலவாக்கலை வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று அடுத்த சில நாட்களுக்குத் தொடரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களில் தீவு முழுவதும் 100 மி.மீ-ஐ தாண்டி கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதுளை மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் மண் சரிவுகள் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாக, பதுளை இடர் முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் உதய குமார தெரிவித்துள்ளார்.

ஒஹிய பகுதியில் பாலம் ஒன்று மூழ்கியதால் ஓஹிய - ஹார்டன் சமவெளி சாலை மூடப்பட்டது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக மாஹோ எல்ல பிரதேசத்தில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பொதுமக்களை இலங்கை விமானப் படை உதவியுடன் மீட்டுள்ளனர். பெல் -212 ஹெலிகாப்டர் மூலம் இவர்கள் மீட்டுள்ளனர்.
இலங்கையில் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, நாடு முழுவதும் சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை அடுத்து, தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


ஜாப்னா முஸ்லீம் : மகாவலி கங்கை, தெதுறு ஓயா, மஹ ஓயா, கலா ஓயா, மாணிக்க கங்கை மற்றும் மல்வத்து ஓயா ஆகிய ஆற்றுப்படுகைகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்குக் கிடைக்கும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக அந்தப் பகுதிகளுக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
நீர்ப்பாசனத் திணைக்களம் (27) இரவு 11.30 மணிக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. 
எனவே, அந்தப் பகுதிகளில் உள்ள ஆற்றுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்களை இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது. 

ஆற்றின் இருமருங்கிலும் உள்ள தாழ்நிலங்களில் வசிப்பவர்கள் கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களை அடைவது மிகவும் உகந்தது என்றும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செலான் மிரர் : மோசமான காலநிலையால் பதுளையில் 31 பேர் மரணம்!
பதுளை மாவட்டத்தில் அடை மழை, மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் பலியாகியுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பதுளை, ஹிந்தகொட, மடுல்சிமை ஆகிய பகுதிகளில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மடுல்சீமை – பட்டாவத்த தோட்டத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய், மூன்று வயது சிறுவன் உள்ளிட்ட ஐவர் பலியாகியுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக