புதன், 18 செப்டம்பர், 2024

பெரியார் பாதையில் பயணிப்போம்” - த.வெ.க தலைவர் விஜய் உறுதி!

 nakkheeran.in  ;தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டசபையில் அறிவித்தார்.
அதன்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், செப்டம்பர் 17ஆம் தேதியான இன்று பெரியார் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவையொட்டி பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து விஜய் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்;

மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்: சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக