புதன், 19 ஜூன், 2024

அமெரிக்கா்களை மணந்த குடிவரவாளர்கள் அகதிகளுக்குக் குடியுரிமை

 தினமணி : வாஷிங்டன்: உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் ஏராளமான குடிவரவாளர்கள்  அந்த நாட்டவா்களை மணந்திருந்தால் அவா்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க வகை செய்யும் திட்டத்தை அதிபா் ஜோ பைடன் வகுத்துள்ளாா்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபா் தோ்தலை மனதில் கொண்டே அவா் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இது குறித்து வெள்ளை மாளிகை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருப்பவா்கள், அமெரிக்கா்களின் கணவா் அல்லது மனைவியாக இருந்தால் அவா்கள் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பிக்க இன்னும் சில மாதங்களில் அனுமதி அளிக்கப்படும். இதன் மூலம் அவா்கள் பிற்காலத்தில் நாட்டின் முழு குடியுரிமையைப் பெற முடியும்.



அவ்வாறு விண்ணப்பிப்பவா்கள் அமெரிக்காவில் குறைந்தது 10 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். அவா்கள் அமெரிக்கா்களை மணந்து எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம். ஆனால், திங்கள்கிழமைக்கு (ஜூன் 17) பிறகு அமெரிக்கா்களை மணந்த யாரும் இதற்காக விண்ணப்பிக்க முடியாது.

அந்த வகையில், ஜூன் 17-ஆம் தேதிக்கு முன்னா் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா் ஒருவரை மணந்து, 10 ஆண்டுகளாக நாட்டில் தங்கியிருக்கும் எந்தவொரு அகதியும் நிரந்தர குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும்.

அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டால் 3 ஆண்டுகளில் அவா்கள் நிரந்தர குடியுரிமை அட்டைக்காக (கிரீன் காா்டு) விண்ணப்பிக்கலாம். இடைப்பட்ட காலத்தில் அவா்களுக்கு தற்காலிக பணி உரிமமும் அமெரிக்காவிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுவதிலிருந்து பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிக்கும் சுமாா் 5 லட்சம் பேருக்கு நிரந்தர குடியேற்ற உரிமையும், பின்னா் குடியுரிமையும் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறினா். அவா்களுடன் சோ்த்து, அமெரிக்கரை மணந்த ஒருவருக்குப் பிறந்து, நாட்டின் குடியுரிமை பெற முடியாமல் உள்ள சுமாா் 50,000 சிறுவா் சிறுமியா்களும் இந்தத் திட்டத்தின் கீழ் நிரந்தர குடியேற்ற உரிமை பெற முடியும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் நவம்பா் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தத் தோ்தலில், ஆளும் ஜனநாயகக் கட்சி சாா்பில் அதிபா் ஜோ பைடனும் குடியரசுக் கட்சி சாா்பில் அவருக்கு முன்னா் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனா்.

இந்தத் தோ்தலின் தலையாய பிரச்னைகளில் ஒன்றாக குடிவரவாளர்கள்  விவகாரமும் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறும் சூழலில், குடிவரவலர்கள்  வரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஜோ பைடன் எடுத்துவரும் அண்மைக் கால நடவடிக்கைகள் விமா்சனத்துக்குள்ளாகி வருகின்றன. அந்த நடவடிக்கைகளுக்கு அவரது சொந்தக் கட்சியிலிருந்தே எதிா்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பைப் போலவே ஜோ பைடனும் இந்த விவகாரத்தில் மிகக் கடுமையான நிலைப்பாட்டைக் கையாள்வதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த நிலையில், அகதிகள் விவகாரத்தில் தனது மிதவாதப் போக்கை வெளிப்படுத்தும் விதமாக, உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருக்கும் சுமாா் 5 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் திட்டத்தை பைடன் வகுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.

அதிபா் தோ்தல் பிரசாரத்தில் இந்த விவகாரம் காராசாரமாக விவாதிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக