புதன், 29 மே, 2024

வடகொரியா குப்பைகள் நிரம்பிய ராட்சத பலூன்களை தென்கொரியா எல்லைக்குள் பறக்கவிட்டது 150 balloons found with excrement from North Korea

 மாலை மலர் :   கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகை மேற்கொள்ளும்போது, இவ்வாறு ஏவுகணைகளை செலுத்தி தென்கொரியாவின் எச்சரிக்கை விடுத்து வருவது வழக்கம்.
தற்போது ஏராளமான ராட்சத பலூன்களை தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வைத்துள்ளது. அதிலும் இரண்டு பலூன்களை ஒன்றாக இணைந்து அதில் குப்பைகளை கட்டி அனுப்பி வைத்துள்ளது.
இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ள தென்கொரியா பகுதிகளுக்குள் ஏராளமான பலூன்கள் இவ்வாறு பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



அந்த பலூன்கள் சுமந்து கொண்டு வந்த பையில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில், பேட்டரிகள், ஷூ பகுதிகள், சாணம் இருந்தாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளது.

வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக தெளிவாக தெரிகிறது. மேலும், தென்கொரிய மக்களுக்கு எதிராக தீவிரமான பாதுகாப்பு மிரட்டல் எனவும் தென்கொரிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த மனிதாபிமானமற்ற மற்றும் மிகவும் தரம்தாழ்ந்த செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கடுமையாக எச்சரிக்கிறோம் எனவும் தென்கொரியா தெரிவித்தள்ளது.

எல்லை அருகில் அமைந்துள்ள ஜியோங்க்கி, கங்வோன் மாகாணத்தில் உள்ள உள்ளூர் அரசு நிர்வாகிகள், அடையாளம் தெரியாத பொருட்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

அந்த பொருட்கள் வீடுகள், விமான நிலையங்கள் மற்றும் சாலைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தற்போது தரையிறங்கியுள்ள பலூன்களால் சேதம் ஏதும் ஏற்பட்டது குறித்து தென்கொரியா தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக