புதன், 11 டிசம்பர், 2019

தமிழக காங்கிரஸ் தலைவராக செல்லகுமார் அல்லது கார்த்தியா ? வெளங்கிடும் ..

டிஜிட்டல் திண்ணை: காங்கிரஸ் தலைவர்... கார்த்தியின் திடீர் மூவ்!  மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டபோது சிதம்பரம் ஆதரவாளர் என்ற வண்ணம்தான் அவர் மீது பூசப்பட்டிருந்தது. ஆனால், அவர் அடுத்தடுத்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால், சிதம்பரம் ஆதரவாளர் என்று தன்மீது குத்தப்பட்ட முத்திரையை அவராகவே துடைத்து வந்தார். நான் யாருடைய ஆதரவாளரும் இல்லை, சிதம்பரம் எனது நண்பர் என்று பேட்டி கொடுத்தார். இத்தகைய செயல்பாடுகளால் கார்த்தி சிதம்பரம் அதிருப்தியாகியிருந்த நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.
அதனால் கட்சி விஷயங்களில் தீவிர கவனம் செலுத்த முடியாமல் தன் தந்தையின் ஜாமீன், வழக்கு விஷயங்களில் தீவிரம் காட்டத் தொடங்கினார் கார்த்தி. சிதம்பரம் கைது செய்யப்பட்டபோது தமிழகத்தில் தீவிரப் போராட்டம் எதுவும் நடத்தவில்லை, தமிழக காங்கிரஸார் அடிக்கடி சென்று சிதம்பரத்தைச் சந்திக்கவில்லை என்ற பல வருத்தங்கள் அழகிரி மீது கார்த்திக்கு அதிகமாகின.

ஆயினும் சிதம்பரத்தைச் சிறையில் சோனியா, ராகுல், மன்மோகன் சிங் ஆகியோர் சென்று சந்தித்ததன் மூலம் அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் சிதம்பரத்துக்கு இருக்கும் செல்வாக்கு அதிகமானது.
இந்த நிலையில் 106 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு சிதம்பரம் ஜாமீனில் விடுதலையான பிறகு காங்கிரஸில் சிதம்பரத்தின் முக்கியத்துவம் அதிகமானது. சிறையிலிருந்த காலத்தில்கூட என்மீது எந்த குற்றச்சாட்டையும் ஆதாரத்துடன் வைக்க முடியவில்லை என்று கூறியிருக்கும் ப.சிதம்பரம், பாஜகவுக்கு எதிரான வலிமையான பிரச்சாரப் புள்ளியாக காங்கிரஸில் உருவெடுத்திருக்கிறார். சோனியாவிடம் செல்வாக்காக இருக்கும் அகமது பட்டேல், சிறையிலிருந்து வெளியே வந்த சிதம்பரத்திடம் முக்கிய ஆலோசனைகள் நடத்தியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் தமிழகத்தில் காங்கிரஸ் தலைவராக இருக்கும் அழகிரி மீது தொடர் புகார்கள் தலைமைக்குச் சென்று கொண்டிருக்கின்றன. மாவட்டத் தலைநகர்கள் விஷயத்தில் அழகிரியின் அணுகுமுறை மற்ற எல்லா தலைவர்களையும் கோபப்படுத்தியுள்ளது. இதை மனத்தில் வைத்துதான் அழகிரி கொடுத்த மாவட்டத் தலைவர்கள் பட்டியலை இன்னும் அப்படியே வைத்திருக்கிறது காங்கிரஸ் டெல்லி தலைமை.
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் தலைவராக இருக்கும் அழகிரி மாற்றப்பட்டால், அந்த இடத்துக்கு தற்போதைய அகில இந்தியப் பொதுச்செயலாளரும், கிருஷ்ணகிரி எம்.பியுமான டாக்டர் செல்லகுமார் நியமிக்கப்படுவதற்கே அதிக வாய்ப்பிருக்கிறது. இதெல்லாம் தெரிந்தும், கார்த்தி சிதம்பரம் தற்போது ஒரு திடீர் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

‘கட்சிக்காகச் சிறை சென்று வந்திருக்கும் உங்களுக்குக் கட்சி கடமைப்பட்டிருக்கிறது. இதுதான் சந்தர்ப்பம். தமிழக காங்கிரஸ் தலைவராக என்னை நியமிக்கும்படி நீங்கள் அழுத்தம் கூட கொடுக்க வேண்டாம். சாதாரணமாகக் கேட்டாலே கொடுத்துவிடுவார்கள். மூப்பனாரின் மகன் வாசன் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்திருக்கும்போது, சிறை சென்ற சிதம்பரத்தின் மகன் தமிழக காங்கிரஸ் தலைவராகக் கூடாதா?’ என்று சிதம்பரத்திடம் சென்டிமென்ட்டாகப் பேசியிருக்கிறார் கார்த்தி சிதம்பரம். இதற்கு சிதம்பரம் செவிசாய்ப்பாரா என்பதுதான் இப்போதைய கேள்வி” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக