![டால்ஸ்டாய் புத்தகத்தை ஏன் வீட்டில் வைத்திருந்தீர்கள்?- திகைக்க வைத்த நீதிபதி](https://minnambalam.com/archive/2019/08/29/32.jpg)
மகாராஷ்டிர மாநிலம் பீமா கொரேகானில் 2018 ஜனவரி அன்று தலித் சமுதாயத்தினரான மஹர் சமுதாயத்தினர் மராட்டிய பேஷ்வா அரசர்களோடு நடந்த போரின் 200 ஆவது ஆண்டு நினைவு பேரணி நடத்தினர். இதை பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் எதிர்த்தன. இந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டதையடுத்து இது தொடர்பாக பலரை கைது செய்தது மகாராஷ்டிர காவல்துறை.
மஹர் இயக்க தலைவர்கள், நாக்பூர் பல்கலைக் கழக பேராசிரியர் ஷோமா சென் உள்ளிட்டோரை முதலில் கைது செய்த போலீஸார், 2018 ஆகஸ்டு 28 ஆம் தேதி சமூக செயல்பாட்டாளர்களான சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லகா, வரவர ராவ், அருண் பெரேரா, மற்றும் வெர்னோன் கோன்சல்வேஸ் ஆகியோரை கைது செய்தது புனே காவல்துறை.
வெர்னோன் கோசல்வேஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவின் விசாரணை நேற்று மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சரங் கோத்வால் முன்னிலையில் நடந்தது.
அப்போது கோன்சல்வேஸின் ஜாமீன் மனுவை எதிர்த்த புனே போலீஸ் தரப்பில், “கடந்த வருடம் மும்பையிலுள்ள கோன்சல்வேஸின் வீட்டை சோதனையிட்டபோது அங்கே அவரது குற்றத்தை நிரூபிக்கும் முக்கியமான சான்றுகள் கிடைத்தன. ராஜ்ய தமன் விரோதி என்ற புத்தகமும், டால்ஸ்டாய் எழுதிய போரும் அமைதியும் என்ற புத்தகம், மாவோயிஸ்டுகள் தொடர்பான புத்தகங்களும் சில சி.டி.க்களும் அங்கே கிடைத்தன” என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி சரங் கோத்வால், “ராஜ்ய தமன் விரோதி என்ற தலைப்பே அரசுக்கு எதிரான விஷயங்களை உள்ளடக்கியிருப்பது போல தெரிகிறது. போரும் அமைதியும் என்ற புத்தகம் இன்னொரு நாட்டில் நடந்த போரைப் பற்றிய புத்தகம். அதை எதற்கு நீங்கள் வைத்திருக்கிறீர்கள்? இதற்கு நீங்கள் விளக்கம் சொல்லியாகவேண்டும்” என்று கேட்டார் நீதிபதி.
இது நீதிமன்றத்தில் கூடியிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது. ஜாமீன் மனு தொடர்பான விவாதம் இன்றும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக