ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் .. அவுஸ்திரேலியா இங்கிலாந்து ஜெர்மனி ... பிரயாண எச்சரிக்கை

ராணுவம்கலிலுல்லா.ச விகடன் : `சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு மக்களிடையே எந்த விளக்கமும் இன்னும் கொடுக்கவில்லை’ ஜம்மு-காஷ்மீரில் மோசமான சூழல் நிலவிவருகிறது. அங்கே அளவுக்கு அதிமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரை மூன்றாகப் பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க திட்டமிடப் பட்டுள்ளதாகவும் இதற்கான அறிவிப்பை சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கலவர தடுப்புப் பிரிவு போலீஸாரும் ஸ்ரீநகரின் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி, ``அமர்நாத் யாத்திரை பக்தர்கள் எண்ணிக்கையைக் குறைப்பதாகக் கூறிய, குழப்பமான நடவடிக்கை குறித்து மத்திய அரசு மக்களை அணுகவில்லை” என்று சாடியுள்ளார். `சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு மக்களிடையே எந்த விளக்கமும் இன்னும் கொடுக்கவில்லை’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

``காஷ்மீரில் சில அரசியல் கட்சிகளால் தேவையற்ற வதந்திகள்தான் பரப்பப்படுகின்றன. நாளைய தினத்தைப் பற்றி எனக்குத் தெரியாது, அது என் கைகளில் இல்லை; இன்றுவரை கவலைப்பட ஒன்றுமில்லை” என்று ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். ஜெர்மனி தனது நாட்டு மக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ``அரசாங்கத்தின் பாதுகாப்பு எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். காஷ்மீரில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் உடனே வெளியேற வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
இங்கிலாந்து அரசாங்கம், `` நீங்கள் ஜம்மு-காஷ்மீரில் இருந்தால், நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றவும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா அரசாங்கம் தரப்பில், ``நீங்கள் பயணம் மேற்கொள்வதாக இருந்தால் உரிய பாதுகாப்புடன் செல்லுங்கள். ஆஸ்திரேலிய அரசு தூதரக உதவிகளை வழங்கவாய்ப்பில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, ``பாகிஸ்தான் பகுதியில் இந்திய ராணுவம் குண்டு வீசுவதாக கூறுவது பொய்; ஆதாரமற்றது. இந்திய பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து உதவி செய்து வருகிறது. பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக