திங்கள், 26 ஆகஸ்ட், 2019

ரஜினி 100 கோடி விஜய் 80 கோடி .. ஆனால் தற்போது நடிகர் விஜயும் 100 கோடி டிமாண்ட் பண்ணுகிறார் ..?

மின்னம்பலம் : தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு பிறகு அடுத்த இடத்தில் செல்வாக்கோடு வலம் வருபவர் விஜய். படத்தின் வசூல், ரசிகர் மன்றங்களின் பலம், அரசியல் நோக்கோடு தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் என ரஜினியின் ஃபார்முலாவில் அதே பாய்ச்சலோடு முன்னேறி, ஒவ்வொரு படத்திலும் தனக்கான இடத்தை நிரூபித்து வருகிறார் விஜய்.
நாடகத்தின் நீட்சியாக தமிழ் நிலத்தில் கருதப்படும் சினிமா, ஒவ்வொரு கால கட்டத்திலும் அக்கால சூழலுக்கு ஏற்ப சவால்களை கடந்து வந்திருக்கிறது. தொலைக்காட்சி சீரியல்கள், திருட்டு டி.வி.டி, தமிழ் ராக்கரஸ், வெப் சீரிஸ் என ஒவ்வொரு சவாலையும் கடந்து சினிமா இன்னமும் அதே வீரியத்துடன் நடைபோட்டு வருவதற்கு முக்கிய காரணம் திரையரங்கில் சினிமா பார்க்கும் அனுபவத்தை மற்ற பிளாட்ஃபார்ம்கள் ஏற்படுத்துவதில்லை என்பது தான். இந்த சவால்கள் அனைத்துமே, ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறக்கூடியவை. ஆனால், என்றுமே மாறாமல் இருக்கும் சவால் என்றால் அது படத்திற்கு படம் உயரும் நட்சத்திரங்களின் சம்பளம் தான்.
திரையரங்குகளுக்குள் பெரும் திரளான மக்களை ஒரே சமயத்தில் ஈர்ப்பது முன்னணி நட்சத்திரங்களே. அந்த முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் தொடர்ந்து நடிக்க முதலீடுகள் செய்து, ரசிகர்கள் மத்தியில் கொண்டுவருவது தயாரிப்பாளர்கள். இதை ஒரு உணவுச் சங்கிலியாகவும் பார்க்கலாம். ஒருவர் அதிகமாய் உண்டாலும், மற்றொருவர் பாதிப்படையலாம். அதனால் அந்த கண்ணியே கூட எதிர்காலத்தில் நிர்மூலமாகலாம்.

இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, ஸ்டண்ட், நடன வடிவமைப்பு, கலை இயக்கம், இசை உள்ளிட்ட 24 துறைகள் சேர்த்து இழுக்க வேண்டிய திரைத்துறை எனும் கூட்டு வாகனத்தை, வெகு சிலர் மட்டும் தங்கள் இஷ்டத்துக்கு இழுக்க தமிழ் சினிமாவின் தடம் புரண்டு கொண்டே வருகின்றது. தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலையையும் கடந்து, சினிமா முதலீடுகளில் பல சிக்கல்கள் உள்ளன என்கிறார்கள் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்.
தமிழ் சினிமாவில் நிலவி வரும் விநியோகச் சிக்கல்களைப் பற்றி தொடர்ந்து மின்னம்பலத்தில் எழுதி வருகிறோம். திரையரங்க உரிமையாளர்கள், சிண்டிகேட் அமைப்பினர், விநியோகஸ்தர்கள் சிக்கல் ஆகியவற்றைப் பற்றி கடந்த சில வாரங்களாக பார்த்தோம். தற்போது படம் எடுக்கவே தயங்க ஆரம்பித்துள்ள தயாரிப்பாளர்களின் நிலையை பற்றி ஓர் நேரடிப் பார்வை.
தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்களில் மிகப்பெரும் வியாபார சக்தியாக கருதப்படும் இரு நபர்கள் என்றால் அது ரஜினிகாந்த், விஜய் எனலாம். பாக்ஸ் ஆபீஸ் வசூல் பட்டியலில் இவர்களது படமே முதல் பத்து வரிசையில் ஆதிக்கம் செலுத்துகின்றது. 2.0, எந்திரன், கபாலி, பேட்ட ஆகிய ரஜினிகாந்த் படங்களும்; மெர்சல், சர்க்கார் ஆகிய விஜய் படங்களே அதிகளவில்(6) இதில் இடம்பெற்றுள்ளன. இவையனைத்தும் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக விஜய்யின் இடத்தை பறைசாற்றுகின்றன.

இந்நிலையில், ரஜினிகாந்துக்கு இணையாக நடிகர் விஜய் சம்பளம் கேட்கிறார் எனவும் அதனால் விஜய்யை நெருங்கவே தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள் எனவும் தயாரிப்பாளர்கள் சார்பில் கூறப்படுகிறது.
ரஜினிகாந்தின் ஒரு படத்திற்கான சம்பளம் 100 கோடி ரூபாய்(ஏரியா ரைட்ஸ் உட்பட). விஜய் தற்போது வாங்கும் சம்பளம் 80 கோடி ரூபாய். ஆனால், சமீபத்தில் ரஜினிகாந்திற்கு இணையான வசூலை தனது படமும் கொடுத்து வருவதால் ரஜினிக்கு இணையாக 100 கோடி ரூபாய் சம்பளம் தனக்கும் வேண்டுமென கேட்டிருக்கிறாராம் விஜய். இதனால் அடுத்தடுத்து விஜய்யை தயாரிக்க திட்டமிட்டிருக்கும் தயாரிப்பாளர்கள் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள்.
விஜய்யின் கூற்றுபடி, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரஜினியின் படங்களுக்கு இணையாகவே விஜய்யின் படங்களும் வசூல் குவித்து வருகின்றன. அதே சமயம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ரஜினிகாந்த் படங்களே முன்னிலை வகித்து வருகின்றன. தேசிய அளவில் பார்த்தாலும் இந்தி சினிமாவில் இன்னமும் ரஜினியின் ஆதிக்கமே நிலைத்திருக்கிறது. அதற்கான சமீபத்திய உதாரணம் தான் 2.0 வசூல் நிலவரம்.
மேலும், ஹாலிவுட், சீனா, ஜப்பான் போன்ற ஓவர்சீஸ் மார்கெட்டிலும் ரஜினிகாந்தின் இடமென்பது நினைத்துக் கூட பார்க்கமுடியாதளவிற்கு இருக்கின்றது என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். குறிப்பாக ஜப்பானில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பலம் மிக அதிகம் என படங்களின் வசூல் அடிப்படையில் கூறுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.
இதனை கருத்தில் கொள்ளாமல் விஜய் தடாலடியாக ரஜினியின் சம்பளத்தை கேட்பதில் கொஞ்சமும் ‘லாஜிக்’ இல்லை என தெரிவிக்கிறார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் விஜய்யை வைத்து அடுத்தடுத்த படங்களை எடுப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். ஏனெனில், வியாபார ரீதியாக சின்ன பிசகல் ஏற்பட்டாலும் அதனால் நேரடியாக பாதிப்படைவது நாங்கள் தான் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
‘விஜய் தனது சம்பள விஷயத்தில் காட்டும் கெடுபிடியை கொஞ்சம் தளர்த்துவது தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்குமே நல்லது’ என்பதே தயாரிப்பாளர்களின் ஒட்டுமொத்த குரலாக இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக