இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் முக்கிய கட்சிகள் ஆதரவுடன் பிரதமராக மாயாவதி திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் உ.பி. மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளரான சித்தார்த் பிரியா ஸ்ரீவத்சவா கூறும்போது, ‘‘மக்களவைத் தேர்தலுக்குப் பின் தொங்கு நாடாளுமன்றம் வந்தால் எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் தாம் பிரதமராகலாம் எனும் கனவில் உள்ளார் மாயாவதி. இதன்மூலம், தாம் பிரச்சினையின்றி உ.பி.யில் முதல்வராகி விடலாம் என அகிலேஷும் அவருக்கு ஆதர வளிக்கிறார்.
இவர்களின் நிலைப்பாடு மூன்று மாநில சட்டப்பேரவை முடிவுகளை போல், காங்கிரஸுக்கே சாதகமாகி விடும்’’ எனத் தெரிவித்தார். அதிகபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உ.பி.யில் மாயாவதிக்கு கடந்த மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி கிடைத்தது. இதனால், தனது எதிரியான சமாஜ்வாதியுடன் கைகோர்க்கத் தயாரானார் மாயாவதி. அதேசமயம், உ.பி.யில் நான்காவது இடம் வகிக்கும் காங்கிரஸை தம் கூட்டணியில் சேர்க்க அவர் தயாராக இல்லை. எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்பதை கம்யூனிஸ்ட்கள் ஏற்காத நிலையில், உ.பி.யில் அதிக தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சி அணியில் முக்கிய கட்சிகள் ஆதரவுடன் பிரதமராகலாம் என்று திட்டமிட்டு மாயாவதி காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மூன்று மாநிலங்களில் கிடைத்த வெற்றியால் காங்கிரஸ் உற்சாக மாகி விட்டது. மாயாவதி ஒரு பக்கம் பிரதமர் கனவில் இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் உ.பி.யிலும் தனித்து போட்டியிட காங்கிரஸ் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக