
BBC :
கடல் சீற்றத்தால் 54 ஆண்டுகளுக்கு டிசம்பர் 23க்கும் 24-க்கும்
இடைப்பட்ட நள்ளிரவில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் சீற்றத்தில் ராமேஸ்வரத்தை
அடுத்து தனுஷ்கோடி நகரமே அழிந்தது. அந்தப் பேரழிவின் நினைவு நாள் இது.அந்த சிதைவுகளின் மிச்சம் மட்டுமே அந்த கண்ணீர் நினைவுகளின் சாட்சியாக இன்றும் உள்ளன. ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் தனுஷ்கோடியையும் பார்க்க வருகின்றனர்.
அவர்களுக்கு அந்த சோக வரலாற்றின் செய்தியை இந்த சிதிலங்களே எடுத்துச் சொல்கின்றன.
வரலாற்றுக் காலத்திலும், பிரிட்டிஷ் இந்தியாவிலும் வணிக மையமாக விளங்கிய துறைமுக நகரம் தனுஷ்கோடி. 1964 டிசம்பர் 23 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான புயல் நள்ளிரவு 12.30.க்கு ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஆயிரக்கணக்கானோர் உயிரை பறித்தது. மறுநாள் அதிகாலை வரை நீடித்த 120 கி.மீ. வேகத்தில் வீசிய புயலால் கடல்நீர் ஊருக்குள் புகுந்து தனுஷ்கோடியை அழித்தது.
கோயில்களிலும், கட்டடங்களிலும், ரயில்நிலையத்திலும், எஞ்சியவர்கள் நாட்டுப் படகில் மண்டபம் முகாமுக்கு தப்பிச் சென்றனர். தற்போது இடிந்து போன, சேதமடைந்த சில கட்டிடங்கள் மட்டுமே புயலின் எச்சங்களாய் தற்போது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சோகத்தை நினைவூட்டி வருகின்றன.

புயலின் அச்சுறுத்தல் இருப்பினும் பல நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் தற்போதும் தனுஷ்கோடியில்தான் உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிதைந்த கட்டடங்களையும், அடிப்படை வசதியின்றி அல்லல்படும் அப்பாவி மீனவர்களின் வாழ்க்கைத் துயரத்தையும் மனதில் சுமந்து கொண்டுதான் செல்கின்றனர்.
இது ஒரு புறமிருக்க மத்திய அரசு தற்போது ஆசிய வங்கி உதவியுடன் ரூ 24,000 கோடியில் தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க முடிவெடித்துள்ளது. இந்த பணி தொடங்குமானால் மீண்டும் 1964-க்கு முன் போல் தனுஷ்கோடிக்கு குடியிருப்புகள் அரசு அலுவலகங்கள் ஆகியவை வரும்.
சிதிலமடைந்த கட்டடங்களை நினைவுச் சின்னங்களாக, உள்ளது உள்ளபடி பராமரிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுகின்றன.இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய நாகராஜ் “நான் சிறு வயதில் இருந்து தனுஷ்கோடி பகுதியை பார்த்து வருகிறேன். 1964 புயலில் சேதமடைந்த பல கட்டடங்கள், ஒவ்வோர் ஆண்டும் மேலும் மேலும் சிதிலமடைந்து வருகின்றன.
குறிப்பாக கடந்த ஆண்டு புயலால் பாதிப்படைந்த தேவலாயம் இந்த ஆண்டு மேலும் சேதமடைந்துள்ளது. இதனை அரசு கண்டு கொள்ளவே இல்லை இந்த நிலை தொடருமானால் வரும் எதிர்கால சந்ததியினருக்கு தனுஷ்கோடி குறித்த வரலாறு தெரியாமலே போய்விடும் என்று தெரிவித்தார்.


தனுஷ்கோடி புயலில் இருந்து தப்பிய அம்பிகாபதி பிபிசி தமிழிடம் பேசுகையில் “சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயிலில் ஆடல்பாடலுடன் சுற்றுலா வந்த மருத்துவக்கல்லூரி மாணவிகள் உள்ளிட்டப் பயணிகள் அனைவரும் புயலில் சிக்கி உருத்தெரியாமல் அழிந்தனர். ரயில் புயலில் சிக்கியது மக்களுக்குத் தெரியவில்லை. இரண்டு தினங்களுக்கு பின் ரயிலில் உயிரிழந்தவர்களின் பிணங்கள் கடற்கரையோரம் ஒதுங்கிய பிறகே இது பற்றித் தெரியவந்தது” என்றார்.
bbc
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக