vikatan.com/எஸ்.மகேஷ் :
சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நெதர்லாந்து நாட்டைச்
சேர்ந்த இளம்பெண், படுக்கையறையில் பிணமாகக் கிடந்தார். அந்த அறையில் பவுடர்
போன்ற பொருள் சிதறிக் கிடந்துள்ளது குறித்து போலீஸார் விசாரணை
நடத்திவருகின்றனர்.சென்னை தி.நகர், வெங்கடேசன் தெருவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலில் கடந்த 27-ம் தேதி நெதர்லாந்தைச் சேர்ந்த லிண்டா என்ற 24 வயது இளம்பெண் தங்கினார். அவர், 30-ம் தேதி அறையை காலிச் செய்வதாக ஹோட்டல் ஊழியர்களிடம் கூறியிருந்தார். ஆனால், அவர் அறையை காலி செய்யவில்லை. அவர் தங்கியிருந்த அறையின் கதவும் நேற்று திறக்கப்படவில்லை. இதனால், ஊழியர்கள் சந்தேகமடைந்தனர். இதுகுறித்து மாம்பலம் போலீஸாருக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். போலீஸார் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள், அறையின் கதவை மாற்றுச் சாவி மூலம் திறக்க முயன்றனர். ஆனால், கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. இதனால் கதவை உடைத்து போலீஸார் மற்றும் ஊழியர்கள் உள்ளே சென்றனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``லிண்டாவின் விசா காலம் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தச் சமயத்தில்தான் லிண்டா இறந்துள்ளார். சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் நேரத்தில் அவர் ஏன் இறந்தார் என்று விசாரித்து வருகிறோம். லிண்டா, சென்னையில் யார், யாரைச் சந்தித்தார் என்ற விவரங்களைச் சேகரித்துவருகிறோம். மேலும் அவரைச் சந்திக்க ஹோட்டலுக்கு வந்தவர்களின் விவரங்களையும் சிசிடிவி கேமரா பதிவு மூலம் ஆய்வு செய்துவருகிறோம். லிண்டாவைச் சந்திக்க வாலிபர் ஒருவர் வந்துள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர் யார் என்று விசாரித்துவருகிறோம். அவர் தங்கியிருந்த அறை முழுவதும் சோதனை நடத்தியதில் உடைமைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. இதனால் அவரின் இறப்புக்கான காரணம் தெரியவில்லை. அவரின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. அதுகுறித்து விசாரித்துவருகிறோம்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக