ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

BBC :மெக்சிகோ நிலநடுக்கம்: 90 பேர் பலியானதாக தகவல்

கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8.2 என்ற அளவில் பதிவான அந்த நிலநடுக்கத்தில் குறைந்தபட்சம் 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தின்போது மொத்தமாக 721 நில அதிர்வுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மெக்சிகன் சீஸ்மோலஜிக்கல் சர்வீஸ் தெரிவித்துள்ளது. மெக்சிகோவின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள வுஹாகு மாகாணத்தில் அதிகபட்சமாக 71 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். மெக்சிகோவில் கடந்த 100 ஆண்டுகளை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவே சக்தி வாய்ந்தது. மீட்புப் படையினர், அவசரகாலப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த நாளான வெள்ளிக்கிழமையன்று, அந்நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதிகளை 'கேட்டியா' என்று பெயரிடப்பட்டுள்ள வெப்பமண்டலப் புயலொன்று தாக்கியது. அந்தப் புயலால் உண்டான கனமழை ஏற்படுத்திய நிலச்சரிவுகளில் இருவர் கொல்லப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக