செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

பேரவையில் குட்கா ... : ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏக்களுக்கு உரிமைக் குழு நோட்டீஸ்

சென்னை சட்டப்பேரவையில் குட்கா, பான் மசாலா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு வந்ததாக கொண்டுவரப்பட்ட உரிமை மீறல் பிரச்சினையில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேருக்கு விளக்கம் மேட்டு உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும், இதில் அமைச்சர் மற்றும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேச அனுமதி கேட்டபோது சபாநாயகர் அனுமதி மறுத்தார். சட்டப்பேரவைக்கு திமுகவினர் பான் மசாலா, குட்கா போதை வஸ்துக்களை எடுத்து வந்து தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டினர். மேலும், இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 20 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் இன்று உரிமைக்குழு கூடியது.  துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உரிமைக் குழு தலைவர். இவர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அதிமுக தரப்பில் 7 உறுப்பினர்களும், திமுக தரப்பில் 5 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மீதமுள்ள 4 உறுப்பினர்களில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர்.  உரிமை மீறல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மு.க.ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
மாலை 5 மணிக்கு தொடங்கிய கூட்டம் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நடந்தது. கூட்ட முடிவில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. நோட்டீஸ் கிடைத்த 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மீண்டும் ஒரு கூட்டம் கூடி விளக்கத்தை பரிசீலிக்கும். பின்னர் என்ன நடவடிக்கை என்பதை சட்டப்பேரவைக்கு அறிவிப்பார்கள். சட்டப்பேரவையில் சபாநாயகர் நடவடிக்கை குறித்து அறிவிப்பார்.
hindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக