திங்கள், 2 ஜனவரி, 2017

உபியில் சமாஜவாதி கட்சி உடைந்தது //... அகிலேஷ் தலைமையில் கூடியது ... முலாயம்சிங்?

  முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி தலைவர் பதவியை கைப்பற்றினார் அகிலேஷ்: உ.பி., அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு லக்னோ:உ.பி.,யில், ஆளும் சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்ட மோதல், நேற்று உச்சக்கட்டத்தை அடைந்து, கட்சி உடைந்துள்ளது. முதல்வர் அகிலேஷ் யாதவ், கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை கூட்டி, தந்தை வகித்த தலைவர் பதவியை கைப்பற்றியதால், பெரும் பரபரப்பு நிலவுகிறது. மகனுக்கு போட்டியாக, முலாயம் சிங்கும், வரும், 5ல், போட்டி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். அகிலேஷுக்கும், அவரது சித்தப்பா, சிவ்பால் யாதவுக்கும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவ தில் கடும் போட்டி நிலவுகிறது. இன்னும் சில மாதங்களில், இங்கு சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளதால், சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்கள் விஷயத்தில், இரு கோஷ்டிகள் இடையே போட்டா போட்டி நடந்தது.


சிவ்பால் யாதவின் துாண்டுதலால், அகிலேஷின் ஆதரவாளர்களை ஒதுக்கி விட்டு, மொத்தம் உள்ள, 403 தொகுதிகளில், 325 தொகுதிகளுக்கு, வேட்பாளர்களை நியமித்தார், முலாயம் சிங். அதிர்ச்சி அடைந்த, அகிலேஷும், அவரது உறவினரும், கட்சியின் தேசிய பொதுச் செயலருமான, ராம்கோபால் யாதவும், தனியாக வேட்பாளர் பட்டியலை அறிவித்தனர்.

இதையடுத்து, இவர்கள் இருவரையும் கட்சியை விட்டு நீக்குவதாக, முலாயம் சிங் யாதவ் அதிரடியாக அறிவித்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், லக்னோவில் நேற்று முன் தினம், அகிலேஷ் யாதவும், ராம்கோபாலும், அவசரக் கூட்டம் நடத்தினர்.
இதில், சமாஜ்வாதியின், 229, எம்.எல்.ஏ.,க் களில், 200க்கும் மேற்பட்டோர் திரண்டு, அகிலேஷுக்கு தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினர். கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை நடத்தவும், அகிலேஷ் ஆதரவாளர்கள் திட்டமிட்டனர்.

இதனால், சிவ்பால் யாதவ் கூடாரம் கலகலத்தது. பாடுபட்டு வளர்த்த கட்சி, கைவிட்டு போவதை அறிந்து அதிர்ச்சி அடைந்த முலாயம், கடைசி முயற்சியாக, மகன் அகிலேஷையும், ராம்கோபால் யாதவையும், மீண்டும் கட்சியில் சேர்த்தார்.

இருப்பினும், ஏற்கனவே திட்டமிட்டபடி, லக்னோ வில், சமாஜ்வாதி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை, அகிலேஷின் ஆதரவாளர்கள் நேற்று நடத்தினர்.

இந்த கூட்டத்தில், சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவராக, அகிலேஷ் யாதவ்தேர்ந்தெடுக்கப் பட்டார். சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவரான, அமர் சிங்கையும், சிவ்பால் யாதவையும் கட்சியில் இருந்து நீக்கவும் திட்டமிடப்பட்டது.அகிலேஷ் கூட்டிய செயற்குழு எடுத்த முடிவுகள், முலாயமை அதிர்ச்சியில் உறையச் செய்தன.

இதையடுத்து, அகிலேஷ், ராம்கோபால் யாதவின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டித்து, முலாயம் சிங் கடிதம் எழுதினார்.அதில், 'சமாஜ் வாதி கட்சியின் தேசிய தலைவர் அனுமதியுடன், தேசிய செயற்குழு கூட்டம் நடத்தப்படவில்லை. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவு களும், சட்டவிரோதமானவை' என, முலாயம் கூறியிருந்தார்.

தேசிய செயற்குழு கூட்டத்தை கூட்டிய, ராம்கோபால் யாதவை, கட்சியில் இருந்து, ஆறு ஆண்டுகளுக்கு நீக்குவதாகவும், கடிதத்தில், முலாயம் அறிவித்தார்.இதற்கிடையே, 'வரும், 5ல், சமாஜ்வாதி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் முறைப்படி நடக்கும்' என்ற அறிவிப்பை, முலாயம் சிங் வெளியிட்டுள்ளார்.

தந்தை - மகன் இடையே ஏற்பட்டுள்ள மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள தால், சமாஜ்வாதி கட்சி, தவிர்க்க முடியாத வகையில், நேற்று பிளவுற்றது.தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்குள், கட்சியை பிடிக்க, இரு கோஷ்டிகளும் மோதும் சம்பவங்கள் நடக்கும் நிலை உருவாகி உள்ளதால், உ.பி., அரசியல் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
முலாயமை கைகழுவியநெருங்கிய கூட்டாளிகள்
'ராம்கோபால் யாதவ் கூட்டிய தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றால், கடும் நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படும்' என, முலாயம் சிங் யாதவ் எச்சரித்திருந்தார். முலாயமுடன் நீண்ட காலமாக நெருக்கமாக இருந்த பல தலைவர்களும், அந்த எச்சரிக்கை யை மதிக்காமல், நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.கட்சியின் பெரும்பாலான, எம்.எல்.ஏ.,க்கள் - எம்.எல்.சி.,க்கள், மூத்த தலைவர்கள், அகிலேஷை தேசிய தலைவராக தேர்ந்தெடுத்தனர். அங்கு திரண்டிருந்த ஏராளமான தொண்டர்கள், கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

கூட்டத்தில், கட்சியின் நிறுவன தலைவரான, முலாயம் சிங்கை, முதுபெரும் தலைவராக அறிவிக்கவும், சமாஜ்வாதி கட்சியின், உ.பி., மாநிலத் தலைவர் பதவியில் இருந்து, சிவ்பால் யாதவை நீக்கவும், ராம்கோபால் யாதவ் தீர்மானத்தை முன்மொழிந்தார்.கட்சியின் தேசியத் தலைவராக அறிவிக்கப்பட்ட பின், அகிலேஷ் பேசுகையில், ''என் தந்தை மீதான மரியாதை, முன்பை விட அதிகரித்துள்ளது. கட்சிக்கு எதிராக சதி செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

தலைமையகத்தை கைப்பற்ற அடி தடி

அகிலேஷின் ஆதரவாளர்கள் நேற்று நடத்திய, தேசிய செயற்குழு கூட்டத்தில், சமாஜ்வாதி கட்சியின், உ.பி., மாநிலத் தலைவர் பதவியிலிருந்து, சிவ்பால் யாதவ் நீக்கப்பட்டு, மூத்த தலைவர்களில் ஒருவரான, நரேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டார்.அதை தொடர்ந்து, கட்சித் தலைமையகத்தை கைப்பற்றும் நோக் கில், அகிலேஷின் ஆதரவாளர்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு, அங்கு சென்றனர். சிவ்பால் யாதவின் ஆதரவாளர்களுடன், அகிலேஷ் யாதவ் ஆட்கள், நேருக்கு நேர் மோதினர். சிவ் பால் யாதவின் பெயர் பலகை, உடைத்து நொறுக்கப்பட்டது; இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

இதற்கிடையே, அகிலேஷ் நடத்திய கூட்டத் தில் பங்கேற்ற, சமாஜ்வாதி கட்சியின் தேசிய துணை தலைவர், கிரண்மோய் நந்தா, மூத்த தலைவர், நரேஷ் அகர்வால் ஆகியோரை, கட்சியில் இருந்து நீக்குவதாக, முலாயம் சிங் அறிவித்தார்.  தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக