திங்கள், 2 ஜனவரி, 2017

சசிகலா - ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர் விற்பனை மோசடி ? சி பி ஐ வளையத்துக்குள் சின்னம்மா!

ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான காலியிடங்களை மார்க்கெட் விலையைவிட குறைந்த விலைக்கு விற்பனை செய்தததால் ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரணை செய்யும் பட்சத்தில் அதில் சசிகலாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவரும் என்ற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.
சென்னை, கிண்டியில் உள்ள ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனம் தனக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் தமிழக அரசின் பங்கு ( ஷேர் ) அதிகளவில் உள்ளது. இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தநிலையில் போதிய வருவாயின்றி நஷ்டத்தில் இயங்கத் தொடங்கியது. இந்நிலையில், இந்நிறுவனம் ஏற்கனவே தனது வணிக செயல்பாட்டுக்காக பல வங்கிகளில் இருந்து அடமான கடன் பெற்றிருந்தது.

அதைத்தொடர்ந்து, வாங்கிய கடன் தொகையைத் திருப்பி செலுத்தும்படி இந்நிறுவனத்திற்கு கடன் வழங்கிய வங்கிகள் நெறுக்கத் தொடங்கின. அதில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உடனடியாக தனது கடன்தொகையை திருப்பிச் செலுத்தும்படி அறிவித்துள்ளது. ஆனால், இந்நிறுவனம் கடன் தொகையை திருப்பி செலுத்தாதால், வங்கியானது தன்னிடமிருந்த அடமானச் சொத்தை ஏலத்துக்கு விடும்நிலையில் இருந்தது.
அப்போது, அதனை ஏலத்துக்கு விடாமல் தமிழக அரசு தடுத்து, ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனத்தின் காலியிடங்களை வி.ஜி.என். என்ற பிரபல கட்டுமான நிறுவனத்துக்கு மார்கெட் விலையைவிட மிக குறைந்த விலைக்கு வாங்க உதவி செய்தது. இதனால், ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதையடுத்து, இதுகுறித்து, கடந்த 2014-ஆம் ஆண்டு பிரச்னை எழுந்தது. அப்போது இதுகுறித்து, 3 புகார்கள் சிபிஐ-க்கு சென்றது.

அதனடிப்படையில் சிபிஐ, ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனத்தின் சொத்துகள் விற்பனையில் நடைபெற்ற மோசடி தொடர்பாக தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் துணை பொது மேலாளர் லியோன் தெரட்டில், அதன் தலைமை மேலாளர் ராமதாஸ், ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயலாக்க அலுவலர் டி.பி.குப்தா, வி.ஜி.என். கட்டுமான நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பிரதீஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்குக்கும், சசிகலாவுக்கும் என்ன தொடர்பு ? முழங்காலுக்கும், முட்டிகாலுக்கும் என்ன தொடர்பு என்பதாக இருக்கிறதே என்றால், அங்கதான் இதில் சசிகலா தொடர்பில் இருப்பது தெரியவருகிறது . ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனத்தின் காலியிடங்களை ஏலத்துக்குப் போகவிடாமல் தமிழக அரசு தடுத்து வி.ஜி.என். என்ற பிரபல கட்டுமான நிறுவனத்துக்கு மார்கெட் விலையைவிட மிக குறைந்த விலைக்கு வாங்க உதவி செய்ததில் சசிகலாவின் தலையீடு அதிகளவில் இருந்தது தெரிய வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தனது வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி தொடர்ந்து விசாரணை செய்தால் இதில், சசிகலா வரை சிக்கும் வாய்ப்பு உள்ளது என்று ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனத்தினர் தகவல் தெரிவிக்கின்றனர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக