பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மாவலியின் நினைவாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை வாமன ஜெயந்தி எனக் குறிப்பிட்டுத் தெரிவித்த வாழ்த்துச் செய்தி
இப்புராணக்கதையின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில், திருவோண நட்சத்திர நாளன்று மாவலி மன்னன் தனது குடிமக்களைக் காண வருவது ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் கேரள மக்கள் மாவலி மன்னனை வரவேற்க, தங்களின் வீட்டின் முன்பு அத்தப்பூக் கோலமிட்டு, பல்வேறு வகையான உணவு வகைகளைச் செய்து படையல் இடுகின்றனர்.
நரகாசுரன், மகிசாசுரன் போன்ற அசுரர்களைப் பார்ப்பனக் கடவுளர்கள் கொலை செய்ததைப் போற்றி தீபாவளி, துர்கா பூஜை உள்ளிட்ட இந்துமதப் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. வெற்றி பெற்ற பார்ப்பனக் கடவுளர்கள்தான் அந்தப் பண்டிகையின் நாயகர்கள். ஆனால் ஓணம் பண்டிகையோ, பார்ப்பனக் கடவுளின் சதியால் கொல்லப்பட்ட அசுர குலத்தைச் சேர்ந்த மாவலியை நினைவுகூர்ந்து வரவேற்கும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையின் நாயகனாக அசுரகுல மன்னன் இருப்பதை உறுத்தலாகக் கருதும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல், அதன் காரணமாகவே ஓணம் பண்டிகைக்கு வாமன ஜெயந்தி என வாழ்த்துத் தெரிவித்து, அப்பண்டிகையின் குறிபொருளையே மாற்றிவிடச் சூழ்ச்சி செய்கிறது.
இந்துமதப் புராணங்களால் கொடுங்கோலர்களாக சித்தரிக்கப்படும் அசுரர்களை, இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களின் குல தெய்வங்களாக வழிபடுகின்றனர். அவ்வகையில், இராமனால் கொல்லப்பட்ட இராவணனை ஜார்கண்டைச் சேர்ந்த பழங்குடி இன மக்களும், துர்க்கையால் நைச்சியமாகக் கொல்லப்பட்ட மகிசாசுரனை சந்தால் பழங்குடி இன மக்களும் குல தெய்வமாகப் போற்றி வருகின்றனர். கேரளத்திலோ பார்ப்பனர் உள்ளிட்ட எல்லாச் சாதியினரும் மாவலியை கொண்டாடுகிறார்களேயன்றி, வாமனனைக் கொண்டாடுவதில்லை.
தனது கருத்துக்குக் கேரள மக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியதும், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் சாக்கில், “கேரளாவில் உள்ள வாமன கோவிலில் மக்கள் அன்றாடம் வழிபடுவதால், வாமன ஜெயந்தி வாழ்த்துக்கள் கூறியதில் தவறு ஏதும் இல்லை” என்று பா.ஜ.க. கேரள மாநிலத் தலைவர் கும்மனம் ராஜசேகரன் தந்திரமான அறிக்கை அளித்தார். மேலும், ”மாவலியை நினைவுகூரும்போது வாமன அவதாரத்தை நினைவுகூராமல் இருக்க முடியுமா?” என்று அடிமுட்டாள்தனமாகவும் சமாளிக்க முயன்றது ஆர்.எஸ்.எஸ்.
இரண்டாம் உலகப் போர் என்றால் ஹிட்லர் நினைவு வரத்தான் செய்யும். இந்திய சுதந்திரப் போராட்டத்தை எடுத்துக்கொண்டால், ஆங்கிலேயர்களைப் பற்றியும் சொல்லத்தான் நேரிடும். ஆர்.எஸ்.எஸ். கும்பலின் வாதப்படிப் பார்த்தால், இந்த வில்லன்களைத்தான் கொண்டாட வேண்டும். அதனுடைய வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதைக் கூட காணவியலாத அளவிற்கு ஆரிய – பார்ப்பன வெறி ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கண்களை மறைக்கிறது.
இது மட்டுமின்றி, கேரளாவில் இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், சாதி இந்துக்கள் எனப் பெரும்பாலான மக்களின் பொதுவான உணவாக மாட்டுக்கறி இருந்துவரும்வேளையில், மாட்டுக் கறிக்குத் தடை கோரி கேரளாவில் பரப்புரை செய்து வருகிறது, பா.ஜ.க. கேரள மக்களின் பாரம்பரியம், பண்பாடு இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், தனது ஆரிய கருத்தியலையும், பண்பாண்டையும் திணிப்பதிலே ஆர்.எஸ்.எஸ். கும்பல் குறியாக இருப்பதைத்தான் இந்த நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
தன்னுடைய ஆரிய வெறியைப் புரிந்து கொள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பலே கேரள மக்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இருந்தபோதிலும், காங்கிரசு முதல் மார்க்சிஸ்டுகள் வரையிலான யாரும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல், “அமித் ஷாவின் கருத்து கேரள மக்களிடையே நிலவும் நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பதாக” மொன்னையாக கருத்து தெரிவித்திருக்கின்றனர். வாமனனின் சூழ்ச்சி தெரிந்தும் அவனுக்கு வரம் கொடுத்த மாவலியை நேர்மையாளன் என்றோ, ஏமாளி என்றோ சொல்லலாம். அமித் ஷாவுக்குச் சலுகை வழங்கும் இவர்களை என்னவென்று அழைப்பது?
– அழகு வினவு.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக