ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

தெறி..தெறி.. செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ரிலீசாகவில்லை...மினிமம் கரண்டி தொகை நாட் ரெடி .?

நடிகர் விஜய், எமி ஜாக்சன், சமந்தா ஆகியோர் நடித்து, இயக்குனர் அட்லி இயக்கி கடந்த வியாழக்கிழமை உலகமெங்கும் வெளியான படம் தெறி. ஆனால் தமிழ்நாட்டில், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் இந்த படம் ரிலீசாகவில்லை. இதனால், அந்த பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். போராட்டங்களும் நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள பெரிய தியேட்டர்களில் மட்டுமே இந்தப் படம் வெளியானது. செங்கல்பட்டு பகுதிக்குள் வரும் எராளமான திரையரங்குகளில் இந்த படம் வெளியாகவில்லை.

இதற்கு காரணம் திரையரங்கு அதிபர்கள்தான் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் தாணுவும், தயாரிப்பாளர் தாணுதான் என்று திரையரங்கு அதிபர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்நிலையில், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் நடந்தது.
அந்த கூட்டத்தில் தெறி படம் குறித்து விவாதிக்கப்பட்டது.இந்த கூட்டம் முடிந்ததும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தெறி படம் வெளியாகதற்கு, திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணுவும், செயலாளர் டி.சிவாவும் கூறி வருகின்றனர். உண்மையில், தாணுவின் தவறான அணுகுமுறையால்தான் தெறி படம் வெளியாகவில்லை.தெறி படத்தை சதவீத அடிப்படையில் முன்பணம் கொடுத்து, வழக்கமான நடைமுறையில் திரையிட தயாராக இருந்தோம். கடந்த இரண்டு வருடங்களாக இந்த முறையில்தான் படங்களை வாங்குகிறோம்.

அதன்மூலம் பெரிய தொகையை வசூல் செய்து தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் அளித்து இருக்கிறோம்.ஆனால், தெறி படத்தின் தயாரிப்பாளர் தாணு, மினிமம் கேரண்டி அடிப்படையில்தான் திரையிட வேண்டும் என்று கூறினார். ஒவ்வொரு திரையரங்கிற்கும் ரூ.1 கோடி முதல் 1.5 கோடி வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. எனவே நாங்கள் இதை ஏற்கவில்லை.எனவே அவர் தெறி படத்தை எங்களுக்கு தரவில்லை.

சென்னை நகரம்  மற்றும் செங்கல்பட்டில் உள்ள மல்டி பிளஸ் திரையரங்குகளுக்கு 50 சதவீத அடிப்படையில் படத்தை கொடுத்த அவர், எங்களுக்கு மட்டும் மினிமம் கேரண்டி முறையில் 75 சதவீதம் வேண்டும் என்று கேட்பது என்ன நியாயம்?

இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை எனில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களுக்கு வருங்காலத்தில் படங்களை கொடுக்கமாட்டோம் என்றும், அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து படங்களை திரையிடுவோம் என்றும் கூறுகிறார்கள். இது முழுக்க முழுக்க பழி வாங்கும் செயலாகும்.தயாரிப்பாளர் எஸ்.தாணு, டி.சிவா மற்றும் நடிகர் சங்க தலைவர் நாசர் ஆகியோரின் செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இதுகுறித்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் வருகிற 20ஆம் தேதி நடைபெறும்” என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக