திங்கள், 10 அக்டோபர், 2011

மாறனின் clandestine 'டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்': தொலைத்தொடர்புத் துறையிடம் விளக்கம் கேட்கும் சிபிஐ

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் வீட்டுக்கும், சன் டிவி அலுவலகத்திற்கும் சட்டவிரோதமாக இணைப்புகள் கொடுத்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு தொலைத்தொடர்புத் துறையை சிபிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல் தொடர்புக்காக 323 இணைப்புகளைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, பிரத்யேக எக்ஸ்சேஞ்சை அமைத்துள்ளார்.
இதில் ஒரு இணைப்பிலிருந்து மட்டும் மாதம் ஒன்றுக்கு 48 லட்சம் தொலைபேசி அழைப்புகள் பேசப்பட்டுள்ளன. இந்த வகையில் மொத்தமாக ரூ. 400 கோடி அளவுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ கணக்கிட்டுள்ளதாக ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.
இதையடுத்து இந்த புகார்களை மறுத்து தயாநிதி மாறன் அறிக்கை வெளியிட்டதோடு அந்த பத்திரிக்கைச் செய்தியில் கூறியுள்ளது போல தான் முறைகேடு எதையும் செய்யவில்லை என்று விளக்கமளித்தார்.

இதுபோன்ற அவதூறான செய்திகளை வெளியிட்டதற்காக நாளிதழ் மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் ரூ. 10 கோடி மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே பி.எஸ்.என்.எல். நிறுவனமோ தயாநிதி மாறனின் போட் கிளப் வீட்டிற்கு ஒரே ஒரு இணைப்பைத் தான் கொடு்தததாகவும், அதன் எண் 24371500 ஐஎஸ்டிஎன்-பிஆர்ஏ என்றும் விளக்கம் அளித்தது. ஒரு இணைப்பைத் தவிர அவரது வீட்டிற்கு வேறு இணைப்பே வழங்கவில்லை என்றது. ஆனால் இந்த இணைப்புகள் அனைத்தும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜரின் பெயரில் இருந்தது தான் வியப்பளிக்கும் விஷயம்.

ஆனால் சிபிஐ மாறனின் விளக்கத்தை நம்பத் தயாராக இல்லை. அதை தெரிவிக்கும் வகையில் தான் மாறனின் போட் கிளப் வீட்டிற்கும், சன் டிவி அலுவலகத்திற்கும் சட்டவிரோதமாக இணைப்பு கொடுத்தது குறித்து தொலைத் தொடர்புத் துறையிடம் சிபிஐ விளக்கம் கேட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று மாறனின் சென்னை போட்கிளப் வீடு, டெல்லி, ஹைதராபாத் வீடுகள், கலாநிதி மாறனின் வீடு, சன் டிவி அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக