திங்கள், 10 அக்டோபர், 2011

சோ: சிபிஐயை நம்ப முடியாது, இதெல்லாம் சும்மா சோதனை- மாறன் ரெய்டு

சென்னை: சிபிஐ சோதனைகள் மீது எனக்கு ஒருபோதும் நம்பிக்கை இல்லை. பரபரப்பாக செயல்படுவது போல நடந்து கொள்வார்கள். ஆனால் கடைசியில் வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள். அப்படித்தான் இப்போது மிக மிக தாமதமாக மாறன் சகோதரர்கள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்துகின்றனர் என்று 'துக்ளக்' சோ. ராமசாமி கூறியுள்ளார்.
மாறன் சகோதரர்கள் வீடுகளில் நடந்த சிபிஐ ரெய்டுகள் குறித்து துக்ளக் ஆசிரியர் சோ. ராமசாமி கருத்து கூறுகையில், இதெல்லாம் சும்மா கண் துடைப்பு சோதனை. சிபிஐ விசாரணைகள் பலவும் கேள்விக்குறியாக உள்ளது. குவாத்ரோச்சி வழக்கு என்னவாயிற்று, மாயாவதி வழக்கு என்னவாயிற்று. இப்படி பல வழக்குகளை கிடப்பில் போட்டுள்ளது சிபிஐ.
ஆரம்பத்தில் வேகமாக செயல்படுவது போல காட்டிக் கொள்ளும் சிபிஐ. ஆனால் கடைசியில் அதை ஒன்றுமில்லாமல் செய்து விடுவார்கள். சிபிஐ மீது எனக்கு ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை. இப்போது நடந்து வரும் சோதனை மிக மிக தாமதமான ஒன்று. இந்த சோதனையில் அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்பது எனக்குப் புரியவில்லை என்றார் சோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக